லாக்அப் மரணம் – தவறிழைத்த
காவல்துறையினரை பணியிடை நீக்கம் செய்து விசாரணை நடத்த
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை வலியுறுத்தல்!
தூத்துக்குடி தென்பாகம் காவல்நிலையத்தில் போலிஸ் காவலில் இருந்த போது போல்பேட்டை மேற்கு பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பரின் மகன் பாண்டியராஜன் (34) மர்மமான முறையில் இறந்துள்ளார்.
அவரது உடலில் காயங்கள் இருந்துள்ளன. காவலர்கள் அடித்ததால் தான் அவர் இறந்திருக்கக்கூடும் என்று குடும்பத்தினரும், பொதுமக்களும் சந்தேகிக்கிறார்கள். பாண்டியராஜன் பின்னிரவு சுமார் 12.15 மணிக்கு குடிக்கத் தண்ணீர் கேட்டதாகவும், அதன் பிறகு அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாகவும் காவல்நிலையத்திற்கு அடுத்த வளாகத்திலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் முன் அவர் இறந்து விட்டதாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். அவர் காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்ட காரணமும், அதன் தொடர்ச்சியாக நடைபெற்றதாகச் சொல்லப்படும் விவரங்களும் நம்பத்தகுந்ததாக இல்லாததோடு, சந்தேகத்தையும் ஏற்படுத்துகிறது. பொதுமக்களும், குடும்பத்தினரும் சொல்லுவது போல் போலிஸ் காவலில் அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று நம்ப இடம் உள்ளது.
எனவே, காவல்நிலையத்தில் சம்பவம் நடந்த போது பணியில் இருந்த அதிகாரிகள் மற்றும் காவலர்களை பதவி இடைநீக்கம் செய்ய வேண்டுமெனவும், உரிய விசாரணை நடத்தி தவறு செய்தவர்கள் தண்டனை பெறுவதை உறுதி செய்ய வேண்டுமெனவும், அவரது குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டுமெனவும், அவரது மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டுமெனவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழக அரசை கேட்டுக் கொள்கிறது.
– ஜி. ராமகிருஷ்ணன்
மாநிலச் செயலாளர்
3-2-2017



