துக்ளக் பத்திரிகையின் 50- வது ஆண்டு விழா சென்னை கலைவாணர் அரங்கில் கடந்த 14 ஆம் தேதி நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய ரஜினிகாந்த், ‘பெரியார் தலைமையில் ராமர், சீதை உருவங்கள் நிர்வாணமாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது, அந்த சிலைகளுக்கு செருப்பு மாலை போடப்பட்டது’ என்று முந்தைய வரலாற்று நிகழ்வு குறித்தும், அப்போது துக்ளக் ஆசிரியர் சோ ராமசாமி தன் இதழில் வரைந்த படம், கட்டுரை குறித்தும் பேசினார்.
ரஜினி குறிப்பிட்ட வரலாற்று நிகழ்வு குறித்து தி.க.வைச் சேர்ந்த பலர் கடும் எதிர்ப்பு கிளப்பினர். இது குறித்து ரஜினி மீது காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டது. திமுக., முரசொலி என்பது குறித்தும் ரஜினி கருத்துக் கூறியதால், திமுக.,வினரால் அதனை ஏற்க முடியவில்லை.
முன்னர்,திமுக., தலைவர் மு.கருணாநிதி உயிருடன் இருந்த போது, ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியபோதெல்லாம், பெரியவர் இருக்கும் வரை அரசியல் குறித்து சிந்தித்துப் பார்க்க மாட்டேன், அவர் மீது நன்றிக்கடன் பாராட்டுவேன் என்றெல்லாம் 1996இல் நடைபெற்ற நிகழ்வுகளை வைத்து ரஜினி பதில் சொல்லிக்கொண்டிருந்தார்.
ஜெயலலிதாவின் யதேச்சாதிகாரம், ஊழலை எதிர்த்து தமிழ் மாநில காங்கிரஸ் என ஜி.கே.மூப்பனாரைக் கொண்டு தொடங்கி, தமிழகத்தில் 96ல் ஆட்சி மாற்றத்துக்கு வித்திட்டவர் துக்ளக் ஆசிரியர் சோ ராமசாமி. சோ மட்டும் ரஜினி, ஜி.கே.மூப்பனார் ஆகியோரை முன்னிறுத்தி அவ்வாறு ஒரு முயற்சியைச் செய்யாவிட்டால், மு.கருணாநிதி அப்போது ஆட்சிக்கு வந்திருக்கவும் முடியாது, மத்தியில் ஆட்சியில் பங்கேற்றிருக்கவும் முடியாது, பாஜக.,தலைமையிலான தே.ஜ.கூட்டணியில் அங்கம் வகித்து, காற்றைக்கூட விலை பேசி விற்று 2ஜி ஊழலில் திளைத்து பெரும் கோடீஸ்வரர்களாக உருமாறியிருக்கவும் முடியாது.
ஆனால், ஜெயலலிதாவை பகைத்துக் கொண்டு போயஸ் கார்டனில் எதிர் அரசியல் நடத்த சோ ராமசாமி மூலம் ஒருங்கிணைக்கப்பட்ட மு.கருணாநிதி, ஜி.கே.மூப்பனார், ரஜினி கூட்டணி எவ்வாறு மாற்றத்தைத் தந்தது என்பதை தமிழக அரசியலை அறிந்த அறிவுள்ளவர் எவரும் அறிவர்.
அன்று, ரஜினிக்கு இருந்த அந்த நன்றிக் கடன் இன்று திமுக.,வுக்கு இல்லாமல் போயிற்று. என்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம், உய்வில்லை செய்நன்றிகொன்ற மகற்கு என்று வள்ளுவர் கூறியவாய்மொழியைப் போல், செய் நன்றி கொன்ற திமுக.,வுக்கு இப்போது உய்வு எதுவும் இல்லை என்பதையே அண்மைக் கால அரசியல் நிகழ்வுகள் சுட்டிக் காட்டுகின்றன.
அந்த செய்நன்றி மறந்த திமுக., கூட்டத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏ., ஜெ. அன்பழகன் தனது டிவிட்டர் பதிவில், ”ரஜினி பொண்ணுக்கு இரண்டாவது கல்யாணம் யாரால் ஆச்சு.? தன் குடும்பத்துக்கே சீர்திருத்தம் செய்தவர் பெரியார்” என குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா, பதிலடி கொடுத்துள்ளார். ‘இந்து பெண்கள் மறுமண சட்டம் வந்தது 1856 – ல், ஆனால் ஈவேரா பிறந்ததோ 1879 – ல் அப்படியிருக்கையில் திமுக பரப்பும் பொய்யை பாருங்கள்’ என்று தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.