
சென்னை, கோவை, மதுரை, சேலம், திருப்பூர் உள்ளிட்ட மாநகராட்சிகளில் முழுமையான ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. தாம்பரம், பல்லாவரம், ஆவடி, பூந்தமல்லி, மீஞ்சூர், பொன்னேரியில் முழுமையான ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.
விழுப்புரம், கடலூர், அரியலூர், தஞ்சை, திருவாரூர், நாகை போன்ற மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.

இன்று ஞாயிற்றுக்கிழமை என்ற போதிலும், பல இடங்களிலும் ஏற்கெனவே ஊரடங்கு அமல்படுத்தப் படுவதால், தெருக்கள் வெறிச்சோடிக் கிடக்கின்றன. கடந்த காலங்களில் தெருக்களில் காய்கறிகள் பழங்கள் விற்றுக் கொண்டு வந்தவர்கள் கூட இல்லாமல் பல மாவட்டக்களில் ஊரடங்கு முழுமையாகக் கடைப்பிடிக்கப் படுகிறது. இந்த நாளில் தெருக்களை தூய்மைப் படுத்துவது, கிருமி நாசினி தெளிப்பது உள்ளிட்ட பணிகளை முழுமையாக நடத்த சில உள்ளாட்சி அமைப்புகள் தீர்மானித்திருக்கின்றன.

மதுரை நகரில் ஊரடங்கு காரணமாக, பிரதான சாலைகள் மட்டுமின்றி தெருக்களும் உள்பகுதி வீதிகளும் கூட வெறிச்சோடிக் கிடக்கின்றன. அரசு அறிவித்த ஊரடங்கு பிரகாரம் ஞாயிற்றுக்கிழமை மதுரை நகரில் அணைத்து கடைகளும் அடைக்கப்பட்டு தெருக்கள் வெறிச்சோடி காணப்பட்டன.
மதுரை நகரில் மேலமடை, அண்ணாநகர், கோமதிபுரம், யாகப்பநகர், வண்டியூர் உள்ளிட்ட பல பகுதிகளில் சிறு கடைகளும் அடைக்கப்பட்டன. பால் பாக்கெட் மற்றும் காய்கறிகள் பல இடங்களில் கிடைக்கவில்லை. சில பகுதிகளில் கோமதிபுரம், மேலமடை வண்டியூர் பகுதிகளில் சில தனி நபர்கள் டிரை சைக்கிளில் தெரு, தெருவாக காய்கறிகளை விற்பனை செய்தனர். ஆனால் பொதுமக்களிடம் இரண்டு, மூன்று மடங்கு அதிக விலைக்கு விற்கப்பட்டன.

சின்ன வெங்காயம் கிலோ ஒன்றுக்கு ரூ. 120..க்கும்..தக்காளி ரூ. 40..க்கும் விற்பனை செய்யப்பட்டன. இந்த திடீர் விலை உயர்வு ஏன் என்று விசாரித்ததில், மேலமடை, கோமதிபுரம் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை சிறிய கடைகளும் அடைக்கப் பட்டதாலும், மாநகராட்சி சார்பில் காய்கறி விற்பனை வாகனமும் வராததாலும் இந்த விலை உயர்வு என்றனர்.
பல தெருக்களில் மக்கள் நடமாட்டம் குறைவால், அடைக்கப்பட்ட கடையின் வாசல்களை பிராணிகள் ஆக்கிரமித்துக் கொண்டன. மதுரை மாவட்ட நிர்வாகம் காலை 9…மணி வரை சிறிய கடைகளை திறக்க அனுமதித்து, பால், காய்கறிகளை விற்க அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை மக்களிடம் இருந்து முன்வைக்கப்பட்டது.
செய்தியாளர்: ரவிச்சந்திரன், மதுரை


