![கொரோனா: அரசு மருத்துவமனைகளில் இருந்து இருவர் தப்பி ஓட்டம்! 1 run 1](https://dhinasari.com/wp-content/uploads/2020/04/run-1.png)
சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தொடர் கொரோனா சிகிச்சையில் இருந்த முதியவர் மற்றும் ஓமந்தூரார் பன்நோக்கு அரசு மருத்துவமனையில் பிசிஆர் பரிசோதனைக்கு வந்த இளைஞர் ஒருவர் தப்பி ஓடிவிட்டனர்.
இந்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா நோய் தடுப்பு காரணமாக கடந்த 33 நாட்களாக மாநிலம் முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. மேலும், கொரோனா பாதித்த நபர்களை சுகாதாரத்துறை அதிகாரிகள் தனிமைப்படுத்தி தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
அந்த வகையில் நேற்று முன்தினம் வரை மாநிலம் முழுவதும் 1,755 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 452 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. நாளுக்கு நாள் கொரோனா தொற்று தீவிரமடைந்து வருவதால் பொதுமக்கள் பலர் தாங்களாகவே முன் வந்து கொரோனா பாிசோதனை செய்து வருகின்றனர். இந்த வகையில், சிந்தாதிரிப்பேட்டையை சேர்ந்த 26 வயது இளைஞர் கொரோனா அறிகுறியுடன் நேற்று முன் தினம் ஓமந்தூரார் பன்நோக்கு அரசு மருத்துவமனையில் பிசிஆர் பரிசோதனைக்கு வந்தார்.
அவருக்கு பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது என்று கூறப்படுகிறது. இதற்கிடையே மருத்துவமனையில் இருந்து சுகாதார அதிகாரிகள் இளைஞரை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளனர். இளைஞரை கொரோனா சிகிச்சைக்காக அழைத்து வர அவரது வீட்டிற்கு சென்ற போது அவர் மாயமாகி இருந்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் நோய் தொற்று மக்களுக்கு பரவிவிடுமோ என்ற அச்சத்தில் மாயமான இளைஞர் குறித்து திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதன்படி போலீசார் மாயமான இளைஞரை தேடி வருகின்றனர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் கொரோனா வார்டில் திருவல்லிக்கேணியை சேர்ந்த 60 வயது முதியவர் ஒருவர் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் கொரோனா வார்டில் இருந்த அவர் நேற்று முன்தினம் இரவு யாருக்கும் தெரியாமல் மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடிவிட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த மருத்துவமனை ஊழியர்கள் சம்பவம் குறித்து டாக்டர்களிடம் தெரிவித்தனர். பின்னர் டாக்டர்கள் அளித்த தகவலின் படி ஜிஎச் போலீசார் தப்பி ஓடிய முதியவரை தேடி வருகினறர்.
ஒரே நாளில் சென்னையில் கொரோனா நோய் தொற்றுடன் 2 பேர் தப்பி ஓடிய சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.