
தமிழக ஆளுநர் பன்வாரி லால் புரோகித் தாம் வெளியிட்டுள்ள மே தின வாழ்த்துச் செய்தியில்…
மே தினக் கொண்டாட்டத்தின் இந்நன்நாளில் நாட்டின் பொருளாதாரத்தை வளமடையச் செய்வதற்கு, தங்களின் அயராத உழைப்பையும், ஆற்றலையும் பெருமளவில் அர்ப்பணித்து, பங்காற்றிவரும் உழைக்கும் தொழிலாளர்களின் சேவையை நினைவு கூர்ந்து தேசமே அவர்களுக்குத் தலைவணங்கி மரியாதை செய்வதில் பெருமை கொள்கின்றது.
நாட்டின் நலனைக் கருத்தில் கொண்டு அதற்காக இரவு பகலாக அயராது பாடுபட்டு, உழைத்துவரும் தொழிலாளர்கள் அனைவருக்கும், உன்னத இப்பணியை திறம்பட மேற்கொள்வதற்கு பேராதரவு அளித்துவரும் தொழிலாளர் குடும்பங்களுக்கும் என்னுடைய வணக்கத்தையும், நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
நாம் அனைவரும் இம் மே தினத்தில் கொடிய கரோனா நோய்த்தொற்றுப் பரவலின் தாக்கத்தை எதிர்த்து, அதை மேற்கொள்வதற்கு தொடர்ந்து பாடுபடுவோம் என்கிற உறுதியான தீர்மானத்தை எடுத்துக் கொள்வோமாக! தற்போதைய சூழ்நிலையிலிருந்து தொழிலாளர்கள் காக்கப்பட, அதற்கான வல்லமையை இறைவன் அருள பிராத்திக்கின்றேன்.
மேலும், தமிழக மக்கள் அனைவரும் கோவிட்-19 தொற்று நோய் குறித்த அரசின் வழிகாட்டு நெறிகளை கவனத்துடன் கடைப்பிடித்து வீட்டிலேயே தொடர்ந்து பாதுகாப்புடன் இருக்க அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். – என்று கூறியுள்ளார்.


