தமிழகத்தில் ஊரக பகுதிகளில் மட்டும் சலூன் கடைகள் திறக்க ஓகே., சொல்லியுள்ளது தமிழக அரசு.
தமிழகத்தில் மே.19 செவ்வாய்க்கிழமை நாளை முதல் ஊரகப் பகுதிகளில் சலூன் கடைகளை முடி திருத்தகங்களை திறந்து கொள்ள தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இது குறித்து திங்கள்கிழமை அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் உள்ள கிராம ஊராட்சி பகுதிகளில் மட்டும் செவ்வாய்க்கிழமை முதல் சலூன் கடைகளை தினசரி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்து செயல்படலாம்.
சலூன்களில் முடி திருத்துவோர் கட்டாயம் கையுறை மற்றும் மாஸ்க் அணிந்திருக்க வேண்டும். மேலும், கடையில் சமூக இடைவெளியை
கட்டாயம் பின்பற்றவேண்டும். அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவுவதுடன், கடைகளை சுற்றி அவ்வப்போது கிருமிநாசினி தெளிக்க வேண்டும்.
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் உள்ள சலூன்கள் கட்டாயம் திறக்கப் படக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிராமப் புறங்களில் பொதுவாக செவ்வாய்க் கிழமை முடி வெட்டவோ, ஷேவிங் உள்ளிட்டவைகளையோ செய்ய மாட்டார்கள். மேலும், செவ்வாய்க் கிழமை முடி திருத்தகங்களை மூடியே வைப்பார்கள். இந்நிலையில் நாளை செவ்வாய் முதல் ஊரகப் பகுதிகளில் சலூன் கடைகளைத் திறக்க அனுமதி வழங்கியுள்ளது அரசு.
- ரவிச்சந்திரன், மதுரை