ஸ்டாலின் நேற்று மாலை ஆளுநரை சந்தித்த போது அவரிடம் அளிக்கப்பட்ட புகார்
கோப்புகளும், கோரிக்கையும் தமிழாக்க வடிவில் தற்போது வெளியாகி உள்ளது.
அதில் குறிப்பிடப்பட்டுள்ள சாராம்சங்கள் எடப்பாடி மற்றும் சசிகலாவை
மையப்படுத்தியே உள்ளது…
அதில் முக்கிய விசயமாக ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் இருவரையும் கைது செய்ய
கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிகிறது.
ஸ்டாலின் ஆளுநரிடம் விடுத்த கோரிக்கையின் தமிழாக்கம்:
மாண்புமிகு ஆளுநர் அவர்கள் நம்பிக்கை வாக்கெடுப்பில் நடந்துள்ள குளறுபடிகள்,
“டைம்ஸ் நவ்” வீடியோ டேப்புகள் உள்ளிட்ட விவகாரங்களில் தலையிட்டு, மீண்டும்
புதியதாக ஒரு நம்பிக்கை வாக்கெடுப்பினை நடத்த முதலமைச்சர் எடப்பாடி
பழனிச்சாமிக்கு உத்திரவிட வேண்டும். சி.பி.ஐ அமைப்பு நேரடியாகவும்,
பாரபட்சமற்ற முறையிலும் “கூவத்தூர்” மற்றும் “குதிரை பேரம்” குறித்து விசாரணை
மேற்கொண்டு 1988-ஆம் வருடத்திய ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு
செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும், வருவாய் புலனாய்வுத் துறை மற்றும்
அமலாக்கத்துறை ஆகிய துறைகள் “குதிரை பேரம்” “பண பரிமாற்றம்” “தங்கம்
கொள்முதல்” உள்ளிட்டவை பற்றி நேரடியாக விசாரணை மேற்கொண்டு, சட்டவிரோதப்
பணப்பரிமாற்றம் நடைபெற்ற பாதைகளை கண்டறிந்து, சட்டவிரோதப் பணப்பரிமாற்றச்
சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற உறுதியான நடவடிக்கைகள்
மூலம் மட்டுமே, சந்தேகத்திற்குரிய வகையில் முதலமைச்சர் தேர்வு செய்யப்பட்டு,
அரசியல் சட்டத்திற்கு விரோதமாக நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்று ஒரு
அரசாங்கம் நடைபெறக் காரணமாக இருப்பவர்களின் கைகளிலிருந்து ஜனநாயகத்தை
பாதுகாக்க முடியும். அது மட்டுமின்றி, அரசியல் சட்டப்படியான நம்பிக்கை
வாக்கெடுப்பில் “குதிரைபேரம்” மூலம் வெற்றி பெற்றதை தடுத்து ஜனநாயகத்தை மீட்க
முடியும் என்று தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
என்று தனது கோரிக்கையின் மூலம் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அரசு இயந்திரம் சரிவர செயல்படாத நிலையில், ஆளுநருக்கே முடிவெடுக்கும் உச்சபட்ச
அதிகாரம் இருப்பதால், இது தொடர்பாக ஆளுநர் சட்டப்படி நடவடிக்கை எடுப்பார்
என்று எதிர்பார்க்கப்படுகிறது.



