அ.தி.மு.க., ஓபிஎஸ் அணி எம்.எல்.ஏ., க்கள் சட்டசபையில் பேச வாய்ப்பு பெற
முடியாமல், பெயருக்கு வந்து செல்கின்றனர்.
ஓபிஎஸ் அணியில் தற்போது 12 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர்.
‘அ.தி.மு.க.,வில் இருந்து, சசிகலா குடும்பத்தை வெளியேற்ற வேண்டும்.
ஜெ., மரணத்தில் உள்ள மர்மம் விலக, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்’
இக்கோரிக்கைகளுடன் உள்ள ஓபிஎஸ் அணியினரின் கோரிக்கையை சசிகலா அணியினர் ஏற்றுக்
கொள்ளவில்லை.
முதல்வர் பழனிசாமி மற்றும் அமைச்சர்கள்சசிகலா குடும்பத்தை விட்டு விலக
முடியாமல், தவிக்கின்றனர்.
சட்டசபை கூட்டத்திற்கு, ஓபிஎஸ் அணியில் உள்ள எம்.எல்.ஏ.,க்கள், பெயரளவிற்கு
வந்து செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அவர்களால், எதையும் பேச முடியாத
நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து, ஓபிஎஸ் அணி எம்.எல்.ஏ.,க்கள் சிலர் கூறுவது:
எதிர்க்கட்சியாக இருந்தால், அரசின் தவறுகளை சுட்டிக்காட்டி பேச முடியும்.
ஆளும் கட்சியாக இருந்தால், அரசின் சாதனைகள் குறித்து பேச வாய்ப்பளிப்பர்.
நாங்கள், இரண்டும் இல்லாமல், திரிசங்கு நிலையில் உள்ளோம்.
சட்டசபையில் பேச, ஆளும் கட்சி சார்பில் வாய்ப்பு வழங்கப்படுவதில்லை. துணை
கேள்வி கேட்க, சபாநாயகர் வாய்ப்பு தருவதில்லை.
எங்கள் அணி எம்.எல்.ஏ., பாண்டியராஜன், பல முறை பேச வாய்ப்பு கேட்ட பின்,
சபாநாயகர் ஒரு முறை மட்டும் அனுமதித்தார். எனவே, அரசுக்கு எதிராக செயல்பட
வேண்டிய நேரம் வந்துவிட்டது.
இதுகுறித்து எங்கள் அணியினருடன் பேச உள்ளோம்
என்று அவர்கள் தெரிவித்தனர்.



