அரசு நிர்ணயித்ததை விட அதிக வரி கட்டியே தீருவேன்அடம் பிடிக்கும்தொழிலதிபர்
டேவிட்
ஜி.எஸ்.டி., அமலான நாளில், ஜி.எஸ்.டி., வரி விதிப்பை வரவேற்று, திருப்பூர்
பின்னலாடை அமைப்பை சேர்ந்த ஒருவர் பிரியாணி விருந்து அளித்ததுடன்,
நிர்ணயிக்கப்பட்ட வரியை விட அதிகம் செலுத்த விரும்புவதாக கூறி, ‘‘ அதிக வரி
கட்டியே தீருவேன்’’ என கிளம்பி உள்ளது ஆச்சரியத்தை ஏற்ப்படுத்தி உள்ளது.
நாடு முழுவதும் ஜூலை. 1 ல் இருந்து ஜி.எஸ்.டி., வரிவிதிப்பு அமலுக்கு
வந்துள்ளது. சரக்கு மற்றும் சேவைகளின் மீதான இவ்வரி குறித்து எதிர்மறையான
கருத்துக்கள் பரவலாக காணப்பட்டாலும், ஜி.எஸ்.டி., வரி விதிப்புக்கு ஆதரவான
கருத்துக்களும் ஆங்காங்கே உருவாகி வருகிறது.
அந்த வகையில், திருப்பூரை சேர்ந்த பின்னலாடை தொழில் அமைப்பினர் ஜி.எஸ்.டி.,
வரி விதிப்புக்கு ஆதரவாக கருத்து தெரிவித்ததோடு, ஜி.எஸ்.டி., அமலான முதல்நாளான
நேற்று (சனிக்கிழமை) தனது தொழில் நிறுவனத்தில் பணி புரிபவர்களுக்கும்,
நண்பர்களுக்கும் பிரியாணி விருந்தளித்து கொண்டாடி உள்ளார்.
திருப்பூர் வால்ரஸ் இன்டர்நேஷனல் உரிமையாளர் டேவிட் என்பவர் ஜி.எஸ்.டி., வரி
விதிப்பால் நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் நண்மை தான் ஏற்படும் என்று
தெரிவித்ததோடு, பிரியாணி விருந்தளித்து நண்பர்களை குஷிப்படுத்தி உள்ளார். இது
குறித்து டேவிட் கூறுகையில், ‘ ஜி.எஸ்.டி., வரி விதிப்பு தேசத்தின்
வளர்ச்சிக்கான ஆரம்பம் தான். இதன் மூலம் வெளிப்படையாக தொழில் செய்து,
நேர்மையாக வரி செலுத்தி மகிழ்ச்சியாக வாழலாம். திருப்பூர் பின்னலாடை தொழில்
வளர்ச்சிக்கு ஜி.எஸ்.டி., வரி விதிப்பு மிக உதவியாக இருக்கும். மிகச்சிறிய
வியபாரிகளாக இருந்தாலும், ஜி.எஸ்.டி., சுய உதவிக்குழுக்களாக 10 பேர் சேர்ந்து
குழுவை உருவாக்கி செயல்படுவோம். இதற்கான பொதுவான குழுவை உருவாக்கி அதன் மூலம்
அனைவருமே முறையாக வரி செலுத்திட வழி வகை செய்யப்படும்.
மேலும் தற்போது நிர்ணயிக்கப்பட்டுள்ள ஜி.எஸ்.டி., வரியை விட அதிகமாக வரி
செலுத்தி நாட்டின் வளர்ச்சிக்கு உதவிட அனைவரும் முன்வர வேண்டும். நான் அரசு
நிர்ணயித்துள்ள வரியை விட அதிகமாக வரி செலுத்த விரும்புகிறேன். அதற்காக
வாய்ப்பினை அரசு உருவாக்கி தர வேண்டும். எனது அடிப்படை தேவைக்கு போக மீதி
வருமானம் அனைத்தையுமே அரசுக்கு வரியாக செலுத்தி இந்த நாட்டின் வளர்ச்சிக்கு
உதவ விரும்புகிறேன். இது போல அனைவருமே முன் வர வேண்டும் என்றார்.
ஜி.எஸ்.டி., வரி அதிகமாக இருக்கிறது, குறைக்க வேண்டும் என பல தரப்பினரும்
கூறி வரும் நேரத்தில், ஜி.எஸ்.டி., வரி அமலாகிய நாளில் பிரியாணி விருந்து
அளித்த தொழிலதிபர் டேவிட், அரசு நிர்ணயித்த ஜி.எஸ்.டி., வரியை விட அதிகம் வரி
செலுத்த தானாக முன்வருவது ஆச்சரியமான விஷயம் தானே.



