சென்னை உட்பட முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட மாவட்டங்களில் வாடிக்கையாளர்களுக்கு நேரடி சேவை கிடையாது என்று வங்கிகள் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மின்னல் வேகத்தில் பரவி வரும் கொரோனா தொற்று காரணமாக, வரும் 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வங்கிகளில் வாடிக்கையாளர் சேவை ரத்து செய்யப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து தமிழ்நாடு மாநில வங்கியாளர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வெளியிட்ட சுற்றறிக்கை: சென்னை, காஞ்சிபும், திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் மதுரை மாவட்டங்களில் ஜூலை 5ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த மாவட்டங்களில் உள்ள வங்கிகள் 4ம் தேதி வரை 33 சதவீத ஊழியர்களுடன் காலை 10:00 முதல் பிற்பகல் 2:00 மணி வரை செயல்படும். பிற பகுதிகளில் வழக்கம் போல வங்கிகள் இயங்கும். ஊழியர்கள் மாற்று முறையில் பணிக்கு வரலாம்.
பெட்ரோல் நிலையங்கள் காஸ் ஏஜென்சி போன்ற அத்தியாவசிய சேவைகள் வழங்கக் கூடிய வினியோகஸ்தர்கள் டீலர்களிடம் மட்டுமே ரொக்கப் பரிவர்த்தனை மேற்கொள்ள வேண்டும். பொதுமக்களுக்கு நேரடி வங்கி சேவை கிடையாது.
இருந்தாலும் 6ம் தேதி முதல் 31ம் தேதிவரை 50 சதவீத ஊழியர்களுடன் வழக்கம் போல மாலை 4:00 மணி வரை வங்கிகள் செயல்படும். அனைத்து நிர்வாக அலுவலகங்கள் காசோலை பரிவர்த்தனை பிரிவுகள் போன்றவை 33 சதவீத ஊழியர்களுடன் 4ம் தேதி வரை செயல்படும். அதன்பின் 50 சதவீத ஊழியர்களுடன் வழக்கம் போல் செயல்படலாம்.
கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள ஊழியர்கள் பணிக்கு வரத் தேவையில்லை. இருந்தாலும் உரிய அதிகாரியிடம் முன் அனுமதி பெற்றிருக்க வேண்டும். கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பின்பற்ற வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.