ரேடியோவை ஆன் செய்தபோது, குண்டு வெடித்ததில், தாத்தா இறந்துவிட்டார். இதில் படுகாயமடைந்த, அவரது பேத்தியும் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார் சேலத்தில் இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சேலம், பனமரத்துப்பட்டி அருகே, தும்பல்பட்டியை சேர்ந்த விவசாயி மணி. 60 வயதாகிறது. கடந்த ஜுன், 17ம் தேதி வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் ஒரு ரேடியோ கீழே கிடந்தது. அதை எடுத்து கொண்டு போய் வீட்டில் வைத்தார்.
யாரும் அந்த ரேடியோவை தேடி வரவும் இல்லை. அதனால் அந்த ரேடியோவை ஆன் செய்தார். அப்போதுதான் அது திடீரென வெடித்து சிதறியது. இதில் மணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
ரேடியாவை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை ஆரம்பித்தனர். அப்போதுதான், வழித்தட பிரச்சனையில், மணியின் அண்ணன் செங்கோடன், தம்பியை கொல்ல ரேடியோவில் வெடி வைத்தது தெரியவந்தது. உடனடியாக அவரை போலீசாரும் கைது செய்தனர்.
ரேடியோ வெடித்தபோது, வீட்டிலிருந்த மணியின் பேத்தி சவுரதி, அண்ணன் மகன் வசந்தகுமார், உறவினர் நடேசன் உள்ளிட்டோரும் படுகாயமடைந்தனர். இதில் 12 வயது சவுரதி அதிகமாக பாதிக்கப்பட்டாள். அவளது குடல் வெளியில் சரிந்து விட்டது.
உடனடியாக அனைவரையுமே சீலநாயக்கன்பட்டியிலுள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுதித்தனர். சவுரதிக்கு ஆபரேஷனும் செய்யப்பட்டது. ஆனால், அவளது உள் உறுப்பு அதிகமாக பாதிக்கப்பட்டு விட்டது.
இத்தனை நாள் தீவிரமான சிகிச்சை தந்த நிலையில், பலனின்றி சவுரதி இப்போது இறந்துவிட்டாள். இதுதொடர்பாக மல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சொந்த தம்பியை பழிவாங்க நினைத்து, இந்த பிஞ்சுவும் சேர்ந்து உயிரிழந்த சம்பவம் சேலத்தில் சோகத்தை தந்துள்ளது.