பாரத பிரதமர் நரேந்திர மோடி பாராட்டிய மதுரை மாணவி நேத்ராவின் தந்தை முடிதிருத்தும் தொழிலாளி மோகன் பாஜக.,வில், கட்சியின் மாநில பொதுச் செயலாளர் சீனிவாசன் முன்னிலையில் இணைந்தார்
மதுரை மேலமடை பகுதியில் பாஜக புறநகர் மாவட்ட செயலாளர் சுசீந்திரன்,பாஜக மாநில செயலாளர் பேராசிரியர் ஸ்ரீனிவாசன் தலைமையில் உறுப்பினர் சேர்க்கை கூட்டம் நடைபெற்றது.
மதுரை அண்ணாநகர் நெல்லை வீதியில் வசித்து வருபவர் முடி திருத்தகத் தொழிலாளி மோகன். இவர் மேலமடை அருகே முடிதிருத்தக கடை ஒன்றை நடத்தி வருகிறார். கொரோனா ஊரடங்கின் போது ஏழை எளிய மக்கள் படுகின்ற துன்பத்தைக் கண்டு, தனது மகளின் எதிர் காலத்திற்காகச் சேமித்து வைத்த ரூ.5 லட்சத்தை பொதுமக்களுக்குக் கொடுத்து உதவினார்!
இந்நிலையில் முடி திருத்தகத் தொழிலாளியின் இந்த மனிதநேயத்தை இந்தியப் பிரதமர் மோடி கடந்த மே 31-ஆம் தேதி தனது வானொலி நிகழ்ச்சியான மனதின் குரல் நிகழ்ச்சியில் பாராட்டிப் பேசியிருந்தார்!
அதனைத் தொடர்ந்து மோகன், நேத்ரா இருவரும் தேசிய அளவில் பிரபலம் அடைந்தனர். இதை அடுத்து, மோகனின் மகள் நேத்ராவை ஐநா., சார்பு அமைப்பு நல்லெண்ணத் தூதராக அறிவித்தது.
இந்நிலையில் பாஜக.,வில் நேத்ராவின் தந்தை மோகன் இணைந்துவிட்டார் என்று செய்திகள் பரவின. ஆனால் அப்போது அவர், தாம் பாஜக.,வில் எல்லாம் இணையவில்லை. தம்மைப் பாராட்டுவதற்காக பாஜக.,வினர் அழைத்திருந்தனர். அதில் கலந்து கொள்ளவே சென்றேன். நான் எந்தக் கட்சியிலும் சேரமாட்டேன் என்று செய்தியாளர்களிடம் கூறி, அதிர்ச்சி ஏற்படுத்தினார்.
இந்நிலையில் தற்போது பாஜக.,வில் தனது நண்பர்கள், உறவினர்கள் என 300க்கும் மேற்பட்டோருடன் பாஜக., மாநில பொதுச் செயலாளர் சீனிவாசன் முன்னிலையில் இணைந்தார்.
தாம் பாஜகவில் இணைந்தது குறித்து மோகன் கூறுகையில், பிரதமர் மோதி எனது சேவையை பாராட்டினார். இதையடுத்து நான் பாஜகவில் இணைய விரும்பினேன். ஆனால் என் எதிரிகள் அப்போது என்னை கொலை செய்து விடுவதாக மிரட்டினார்கள். அதனால் பயந்து போன என் மனைவி நமக்கு கட்சியே வேண்டாம் என்று கூறினார். இதையடுத்து நான் வேண்டாம் என்று மறுத்தேன். ஆனால் இப்போது எந்தப் பிரச்னை வந்தாலும் அதை எதிர்கொள்ள தயாராக உள்ளேன். நான் பாஜக உறுப்பினராக இருந்து சேவை செய்யவே விரும்புகிறேன். எனவே என்னை பாஜகவில் இணைத்துக் கொண்டேன்” என்று கூறினார்.
- செய்தி: ரவிச்சந்திரன், மதுரை