மோடி பாராட்டிய மதுரை சலூன் கடைக்காரர் மோகன்!

Published:

mohan madurai

மதுரை: பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது வானொலி உரையான மன்கிபாத் – மனதின் குரல் நிகழ்ச்சியில் மதுரையைச் சேர்ந்த மோகன் என்பவர் செய்து வரும் உதவிகள் குறித்து குறிப்பிட்டு, அதற்காக தாம் நன்றி தெரிவிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். இதை அடுத்து மோகன் குறித்த பரபரப்பு தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் கொரோனா பரவலைத் தடுக்க பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஊரடங்கு தொடங்கிய நாளில் இருந்து பலர் உதவி செய்து வருகின்றனர். அவர்களில் ஒருவர் மோகன்.

மதுரையில் மேலமடையில் வசித்து வருகிறார் 47 வயதான மோகன்! சலூன் கடை நடத்தி வரும் இவர், ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு 5 கிலோ அரசி, காய்கறிகள், பலசரக்கு சாமான்கள் மற்றும் சமையல் எண்ணெய் போன்றவற்றை வழங்கி வருகிறார். இதற்காக தனது மகள் நேத்ராவின் படிப்புக்காக சேமித்து வைத்த 5 லட்சம் ரூபாயை செலவிட்டுள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் மேலசிருபோத்து கிராமத்தில் பிறந்தவர் மோகன். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு மதுரை நெல்லிதோப்பு பகுதியில் குடி பெயர்ந்தார். ‘‘நான் உதவி வழங்குவதை கேள்விப்பட்டு ஏராளமான மக்கள் என் வீட்டு கதவை தட்ட தொடங்கியுள்ளனர். என்னிடம் இருக்கும் பணத்தை வைத்து உதவிகளை வழங்கி வந்தேன். மேலும் பணம் தேவைபட்டால் எனது மனைவியின் நகைகளை வைத்தும், எனது இடத்தை விற்றும் உதவிகள் செய்வேன். உதவி செய்வதால் இழந்த பணத்தை என் வாடிக்கையாளர்களிடம் இருந்து மீண்டும் சாம்பாதித்து விடுவேன் என்ற நம்பிக்கை உள்ளது’’ என்று தெரிவித்திருந்தார்.

மோகனின் மகள் நேத்ரா, தற்போது ஒன்பதாவது வகுப்பு படித்து வருகிறார். ஐ.ஏ.எஸ் ஆக வேண்டும் என்ற கனவுடன் படித்து வருவதாக அவர் தெரிவித்துளார். இக்கட்டான நிலையில் மக்களுக்கு மோகன் உதவிய சம்பவம் பிரதமர் மோடிக்கு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று மன் கீ பாத் நிகழ்ச்சியின்போது மகள் படிப்புக்காக வைத்திருந்த ஐந்து லட்சம் ரூபாய் பணத்தில் மக்களுக்கு உதவிய மோகனுக்கு பாராட்டு தெரிவித்தார்.

ALSO READ:  வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

மேலும் ‘‘கொரோனாவுக்கு எதிரான போரை மிகவும் வலுவுடன் இந்திய மக்கள் எதிர்த்துப் போராடி வருகின்றனர். பொதுமுடக்கம் கொஞ்சம் கொஞ்சமாக விலக்கப்பட்டு வரும் நிலையில் நாம் மேலும் ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டும். மக்களின் ஒத்துழைப்பே கொரோனா வைரஸிற்கு எதிரான போரில் வெற்றி பெற முக்கியக்காரணம். இந்தியா எப்படி இதை சாதித்தது என்பதைத்தான் உலகமே உற்று நோக்கியுள்ளது’’ என்றார்.

இந்நிலையில், மதுரையைச் சேர்ந்த மோகன், தனது உதவும் உள்ளத்தால் இன்று இந்திய அளவில் பேசப்படும் நபராக மாறியுள்ளார்.

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை

Related articles

Recent articles

spot_img