ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் மாலை, கிளி, பரிவட்டம் திருப்பதி பிரம்மோற்சவத்திற்கு புறப்பட்டு சென்றது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் சூடிக் களைந்த மாலை, கிளி, பரிவட்டம் உள்ளிட்டவை திருப்பதி ஏழுமலையானுக்கு சாற்றுவதற்காக திருமலைக்கு அனுப்பி வைக்கப் பட்டது.
108 திவ்ய தேசங்களில் ஒன்றான ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோவிலில் இருந்து அனுப்பி வைக்கப் படும் கிளி, மாலை, பரிவட்டம் ஆகியவை, ஒவ்வொரு வருடமும் திருப்பதியில் நடைபெறும் புரட்டாசி பிரம்மோத்ஸவத்தின் போது மோகினி அலங்காரத்தில் எழுந்தருளும் மலையப்பசாமிக்கு சாற்றுவது வழக்கம். சுமார் 1000 ஆண்டுகளாக நடைபெற்று வரும் ராமானுஜர் தொடங்கி வைத்த இந்த நடைமுறை இன்றளவும் தொடர்கிறது.
அதனடிப்படையில் திருப்பதியில் நடைபெறும் பிரம்மோத்ஸவத்தின் 5-ஆம் திருநாளான கருட சேவை அன்று மோகினி அலங்காரத்தில் எழுந்தருளும் மலையப்பசாமிக்கு சாற்றுவதற்காக ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோவிலில் இருந்து மாலை, கிளி, பரிவட்டம் உள்ளிட்டவை ஆண்டாளுக்கு சாற்றப்பட்டு தொடர்ந்து நான்கு சக்கர வாகனம் மூலம் திருப்பதி புறப்பட்டு சென்றது.
முன்னதாக இன்று காலை ஸ்ரீ ஆண்டாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து செல்லும் மாலை நேற்று மாலை முதல் கோவில் வளாகத்திலேயே வைத்து மனோரஞ்சிதம் உள்ளிட்ட அரிய வகை மலர்களால் தயாரிக்கப்பட்டது.
திருப்பதிக்கு மாலை செல்லும் இந்த விழாவில் திருக்கோவில் தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் இளங்கோ உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
- செய்தி: ரவிச்சந்திரன், மதுரை