தஞ்சாவூர் அருகே திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 15 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே நடுகடை பகுதி உள்ளது. இங்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஒரு திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த திருமண நிகழ்ச்சியில் வெளி நாடுகளிலிருந்து 2 பேரும், உள்ளூரில் இருந்து நூற்றுக்கணக்கானவர்களும் கலந்து கொண்டனர்.
இதில், வெளி நாடுகளிலிருந்து வந்த 2 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து, திருமணத்தில் கலந்து கொண்ட பலருக்கும் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டது. அதில், 15 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட அனைவரும் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, நடுக்கடையில் உள்ள ஷாஜகான் தெரு மற்றும் மைதீன் தெரு உள்ளிட்ட பகுதிகளை தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அந்த பகுதியில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுகாதாரத்துறையினர் தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.