
எடப்பாடி பழனிச்சாமி அமைச்சர்களை அடக்கிவைக்க வேண்டும். இல்லையெனில் தி.மு.க திருப்பி அடிக்கும் என முன்னாள் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மற்றும் தங்கம் தென்னரசு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில், விருதுநகரில் தி.மு.க முன்னாள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பேசுகையில், “தி.மு.க தலைவரை தரம் தாழ்ந்த வகையில் பேசினால் எடப்பாடி பழனிசாமி பாராட்டுவார், வாழ்ததுவார் என நினைத்து ராஜேந்திரபாலாஜி பேசி வருகிறார்.

ஜெயலலிதா இருக்கும்போதே அ.தி.மு.க அமைச்சர்கள் ஜெயலலிதாவின் காலை மட்டுமல்ல அவருடைய கார் டயரையும் கும்பிடு போட்டு பிழைத்தார்கள்.
தற்போது பிரதமர் நரேந்திர மோடியின் தயவில் பிழைத்துக் கொண்டு உள்ளார்கள். தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் எந்த மூலை முடுக்கிற்கும் சென்று மக்களைச் சந்திப்பார். ஆனால் துணைக்கு ஆள் இல்லாமல் ராஜேந்திர பாலாஜி செல்லமுடியுமா?
கடந்த 10 வருடமாக அ.தி.மு.கவினர் தமிழ்நாட்டை கொள்ளை அடித்து வருகின்றனர். அதை தி.மு.க தலைவர் சொன்னதில் என்ன தவறு? தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் முதலில் சிறைசெல்லும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தான்.தரம் இல்லாமல் பேசுவதை ராஜேந்திரபாலாஜி நிறுத்தவேண்டும். இல்லையெனில் அவரால் இனி விருதுநகர் மாவட்டத்தில் அரசியல் செய்ய முடியாது என எச்சரிக்கை விடுத்தார்.

விருதுநகர் வடக்கு மாவட்ட தி.மு.க செயலாளரும் திருச்சுழி சட்டமன்ற உறுப்பினருமான தங்கம் தென்னரசு பேசும்போது, ராஜேந்திர பாலாஜிக்கு “அது” இருந்தால் தி.மு.க தலைவரின் குற்றச்சாட்டிற்கு எதிராக வழக்கு போட்டிருக்க வேண்டும். ராஜேந்திரபாலாஜி நாவை அடக்கவேண்டும் இல்லையெனில் ஜனநாயக முறைப்படி தி.மு.க அவர் நாவை அடக்குவோம் என்றார்.


