புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கும்பளாங்குண்டு சுனையக்காடு கிராமத்தில் சேகர் (39) – அமிர்தவல்லி (19) தம்பதியர் வசித்து வந்தனர். கூலி தொழிலாளியான சேகர், திருமணத்திற்கு பிறகு வேலைக்குச் செல்லவில்லை என கூறப்படுகிறது.
எனினும் சேகர், தினமும் குடித்து விட்டு வீட்டிற்கு வருவதாகவும், இதனால் கணவன் – மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்தது தொடர்கதையாக இருந்ததாக உறவினர்கள் கூறுகின்றனர்.
இந்தநிலையில் வீட்டிற்கு வந்த கணவரிடம், வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு வீட்டுக்கு வருகிறாயே என்று மனைவி திட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சேகர் வீட்டில் வைத்திருந்த மண்ணெணையை அமிர்தவல்லி மீது ஊற்றி தீ வைத்ததாக தெரிகிறது.
இதனால் உடலில் தீ பற்றியதால் அமிர்தவல்லி அலறியுள்ளார். அவரது சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தப்போதும் அவை பலனளிக்காமல் உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்த அறந்தாங்கி போலீசார் புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இருந்த சேகரை காவல்நிலையம் அழைத்துவந்தனர். பின்னர் வழக்குப்பதிவு செய்து சேகரை கைது செய்தனர்.
கணவனே புது மனைவியை தீவைத்து கொளுத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.