புழல் அடுத்த சூரப்பட்டு சீனிவாசன் நகரை சேர்ந்த முகமது இப்ராகிம் மகள் சமீரா (22). எதிரொலி என்ற படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள இவர், நேற்று முன்தினம் புழல் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.
அதில், செங்குன்றம் பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் (55), செங்குன்றம் அடுத்த கோடுவெளி பகுதியில் ஜெயசூர்யா பொறியியல் கல்லூரி நடத்தி வருகிறார். இவர், ஒரு திரைப்படம் தயாரிக்க உள்ளதாகவும், அதில் கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்றும் என்னிடம் கூறினார். அதற்கு நான் சம்மதம் தெரிவித்தேன்.
இதையடுத்து, கதை டிஸ்கஷனுக்கு சென்றபோது, கோவிந்தராஜ் கொடுத்த மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை குடித்த சிறிது நேரத்தில் நான் மயங்கி விட்டேன்.
அபோது, அவர் என்னை பாலியல் பலாத்காரம் செய்தார். மேலும், அதை வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு, எனக்கு ஒத்துழைப்பு தரவில்லை என்றால், அந்த வீடியோவை இணையதளத்தில் வெளிவிடுவதாக என்னை மிரட்டினார்.
இது சம்பந்தமாக, கடந்த 2019ம் ஆண்டில், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தேன். அந்த புகார், அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டு, தற்போது நிலுவையில் உள்ளது. இந்நிலையில், கடந்த 2019ம் ஆண்டு, கோவிந்தராஜின் அடியாளான ஜெயக்குமார் என்பவர் என்னை தொடர்புகொண்டு, கோவிந்தராஜ் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்த புகாரை திரும்ப பெற வேண்டும். அவர் சொல்வதை கேட்டு நடந்துகொள். இல்லையென்றால், நீ எனக்கு பணம் தரவேண்டும் என பொய் புகார் அளிப்பேன் என மிரட்டினார்.
இதனையடுத்து, என் மீது கடந்த செப்டம்பர் 2019ம் ஆண்டு, ஜெயக்குமார் அம்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகார் தொடர்பாக, அம்பத்தூர் காவல் நிலையத்துக்கு நான் சென்று, ஜெயக்குமாரிடம் எந்த பணமும் வாங்கவில்லை என விளக்கம் அளித்தேன்.
இதனையடுத்து, அம்பத்தூர் போலீசார் நீதிமன்றம் சென்று, இப்பிரச்னையை தீர்த்துக் கொள்ளுமாறு கூறி, என்னை அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில், கடந்த பிப்ரவரி 17ம் தேதி மாலை 3 மணி அளவில் நான் வீட்டிலிருந்தபோது, என் வீட்டுக்கு கோவிந்தராஜின் அடியாட்களான ஜெயக்குமார், நக்கீரன், பூர்ணிமா மற்றும் 4 ஆண்கள், 4 பெண்கள் வந்து என்னையும், என் தாயாரையும் தகாத வார்த்தைகளால் திட்டினர். ஜெயக்குமார் என் கழுத்தை பிடித்து நெரித்து, கோவிந்தராஜ் சொல்வதை மறுக்காமல் கேட்க வேண்டும்.
இல்லையெனில் உன்னை கொலை செய்து விடுவேன் என மிரட்டினார். அப்போது உடன் இருந்த அடியாட்கள் என்னையும் என் தாயாரையும் ஆபாசமாக பேசியதோடு, எங்களை சராமரியாக அடித்து உதைத்தனர்.
எனவே, எங்களை கொடூரமாக தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த மேற்கண்ட கும்பல் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார். இதுகுறித்து புழல் போலீசார் கோவிந்தராஜ் மீது இந்திய தண்டனை சட்டம் பிரிவு எண் 61, 147, 447, 448, 294பி, 323 மற்றும் 506(1) ஆகிய பிரிவுகளின் வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்