அப்பல்லோ மருத்துவமனை கிளைகளின் பாதுகாப்பை உறுதி செய்தபின் ஒரு நாள் தாமதமாக ஜெயலலிதா மரணம் அறிவிக்கப் பட்டதாக திவாகரன் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதாவின் இறப்பை ஏன் தாமதமாக அறிவிக்கிறீர்கள் என்று கேட்டதற்கு பல்வேறு இடங்களில் உள்ள மருத்துவமனைகளின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள் என்று மருத்துவமனை நிர்வாகத்தில் இருந்து கேட்டுக் கொண்டதாக திவாகரன் தெரிவித்தார்.
2016 செப்டம்பர் 22ஆம் தேதி உடல்நல பாதிப்பு காரணமாக சென்னை அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதாவுக்கு, 75 நாட்கள் சிகிச்சைக்கு பின்னர் டிசம்பர் 4-ஆம் தேதி திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதை அடுத்து ஜெயலலிதா டிசம்பர் 5ஆம் தேதி இறந்துவிட்டதாக அப்பல்லோ நிர்வாகம் அறிவித்தது.
இந்த நிலையில், ஜெயலலிதா மரணம் குறித்து முன்னதாகவே ஊடகங்களிலும் செய்தி கசிந்தது. இதனால், இந்த மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறப்பட்ட புகாரை அடுத்து, தமிழக அரசு சார்பில் ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழாவையொட்டி திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் நடந்த பொதுக் கூட்டத்தில் சசிகலாவின் சகோதரர் திவாகரன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் 4-ஆம் தேதி மாலை 5.15க்கே இறந்துவிட்டார். ஆனால் அவரது மரண அறிவிப்பை மறுநாள் டிசம்பர் 5-ஆம் தேதிதான் அறிவிக்க வேண்டும் என்று அப்பல்லோ நிர்வாகம் தெரிவித்தது.
இது குறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்ட போது தமிழகத்தில் எங்கள் மருத்துவமனையின் கிளைகள் பல இடங்களில் உள்ளன. முதலில் அவற்றின் பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள். பிறகு அறிவிக்கலாம் என்றனர்… என பேசினார்.


