
அ தி மு க மற்றும் தி மு க ஆகிய இரு பிராந்திய கட்சிகள் தான் தமிழகத்தை 1967 முதல் ஆண்டு வருகின்ற காரணத்தினால் தமிழகம் தேசியத்திற்கும் தெய்வீகத்திற்கும் எதிரானது என்ற தோற்றத்தை இங்கே உள்ள ஊடகங்கள் மற்றும் அரசியல் கட்சிகள் உருவாக்கி வந்திருக்கின்றன.
ஆனால் உண்மை நிலவரம் என்ன? முதலில் தேசிய உணர்வைப் பிரதிபலிக்கும் இரண்டு காரணிகளை எடுத்துக்கொள்வோம். தமிழத்தின் மக்கள் தொகையை பிரதிபலிக்கும் வண்ணம் இந்திய ராணுவத்தின் முப்படைகளிலும் தமிழர்கள் விரும்பிச் சென்று பணியாற்றி வருகிறார்கள்.
இந்தியாவில் எந்தப் பேரிடர் நடந்தாலும், அதற்கான நிவாரண நிதிக்கு தமிழக மக்கள் பெரிய அளவில் நன்கொடை கொடுத்து வந்திருக்கிறார்கள். தெய்வீகத்தை எடுத்துக்கொண்டால், காலம் காலமாகவே பொருளாதார சமூக பண்பாட்டு விழுமியங்களோடு தெய்வீகம் தமிழகத்தில் பின்னிப் பிணைந்திருப்பதைக் காணலாம்.
ஆனால் தமிழக மக்களில் பெரும்பான்மையோர் தேசியத்தையும் தெய்விகத்தையும் வாழ்வில் இரண்டறக் கலந்து வாழ்பவர்களாக இருந்தாலும், பா ஜ க வைத்தவிர வேறு எந்த கட்சியும், அவர்களது நியாயமான எண்ணங்களையும், உரிமைகளையும், விருப்பங்களையும், பிரதிபலிப்பவராகவும், முனைந்து செயல்படுத்துவராகவும் இல்லை என்பதே நிதர்சனம்.
தேர்தல் சமயத்தில் தேசிய மற்றும் தெய்வீக வாக்காளர்களை திருப்திப்படுத்த இரண்டு முக்கிய கட்சிகளும் குரக்களி வித்தை காட்டினாலும், தேசிய மற்றும் தெய்வீக வாக்காளர்களின் உரிமைகளுக்கு எதிராகவே மற்ற நேரங்களில் செயல்படுகின்றன. இந்த இரண்டு விஷயங்களிலும் தமிழர்கள் பெற வேண்டிய உரிமைகள் கானல் நீராகவே கடந்த ஐம்பது வருடங்களாக போய்க்கொண்டிருக்கிறது.
இன்று தமிழகம் ஐம்பது சதவீதத்திற்கு மேல் நகர்ப்புறமாகி விட்டது. ஆனால் நமது பாரம்பரியம், கலை கலாச்சாரம் மற்றும் பழங்கால அறிவியல் பொக்கிஷங்களாக கோவில்கள் மற்றும் அதை ஒட்டியுள்ள நீர்நிலைகள், விளை நிலங்கள் எல்லாம் கிராமங்களில் இருக்கின்றது. நாம் நகர்ப்புறங்களுக்கு குடியேறிவிட்டதனால் அவற்றை பெயர்த்துக்கொண்டு வந்து நம்மால் நகர்ப்புறங்களில் நிறுவி விட முடியாது.
நமது பாரம்பரிய சின்னங்கள் சிதைந்தால் தான் தங்களது மத வழிபாட்டை தமிழகத்தில் பெரிய அளவில் கொண்டு செல்ல முடியும் என்று காத்திருந்த மத மாற்ற கொக்குகளுக்கும், ஐம்பது ஆண்டுகளாக நம்மை ஆண்டவர்களுக்கும், பாரம்பரிய கலாச்சார பண்பாட்டு ஆன்மிக குளங்கள் வற்றிப் போனதால் மீன் வேட்டை கிடைத்து கொழுத்துப்போயிருக்கிறது.
தகவல் தொழிநுட்பம் உச்சத்தை எட்டியிருப்பதினாலும், நமது சொந்த கிராமங்களுக்கும், சிறு ஊர்களுக்கும் நகரங்களுக்கும் சென்று அங்கேயே தங்கி நமது பணிகளையே சொந்த ஊரோடு இணைந்த குறைந்த வாழ்க்கைச் செலவில் தொடர இப்போது நமக்கெல்லாம் மிக அரிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
சமீபத்திய உதாரணம், உலகின் மிகப்பெரும் நிறுவனங்களில் ஒன்றான Zoho Corporation தனது மிகப்பெரிய அலுவலகத்தை குளிர்ச்சியான தென்காசி மாவட்டத்தில் மதலம்பரையில் அமைத்து ஏராளமான பேருக்கு பணி வாய்ப்புகளை வழங்கி வருகிறது. ஆனால் சுரண்டப்பட்டுவிட்ட, ஆக்கிரமிப்புக்கு உட்படுத்தப்பட்ட கோவில்கள் மற்றும் அதை ஒட்டியுள்ள நீர்நிலைகள், விளை நிலங்களை ஓரளவாவது மீட்டெடுத்தால் தான், நமது சொந்த ஊர் வாழ்க்கைக்கு திரும்பும்போது கொஞ்சமேனும் சுவாரசியம் கிடைக்கும்.
இதனை வலியுறுத்தி சொல்லக்கூடிய ஒரே கட்சி தமிழகத்தில் பா ஜ க என்பதால், இருபது தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும் பா ஜ க ஆட்சி அமைக்க முடியாது என்ற போதிலும், பா ஜ க பிரதிநிதித்துவம் சட்டசபையில் கணிசமாக இருக்கும்போது யார் ஆட்சி அமைத்தாலும், பாஜக சட்டமன்ற உறுப்பினர்களது கோவில்கள் மற்றும் அதை ஒட்டியுள்ள நீர்நிலைகள், விளை நிலங்களை ஓரளவாவது மீட்டெடுக்கும் கோரிக்கைகளை முற்றிலும் புறந்தள்ளி விட முடியாது.
அது மட்டுமல்ல, மாநிலத்தில் சில சட்டமன்ற தொகுதிகளிலாவது பா ஜ க உறுப்பினர்கள் பிரதிநிதிகளாக இருக்கும்போது, மத்திய பா ஜ க அரசின் பல்வேறு நல்வாழ்வுத் திட்டங்கள் நேரிடையாக மக்களுக்கு செல்லும்படி எளிய வழிமுறைகளை உருவாக்கித் தரமுடியும்.

பிரதம மந்திரியின் வீட்டு வசதி திட்டம் (PMAY), கழிப்பறை கட்டிக் கொடுக்கும் திட்டம், ஒவ்வொரு வீட்டுக்கும் குழாய் வழியாக குடிநீர் தரும் திட்டம், பல்வேறு பகுதிகளோடு இணைக்கும் கிராம மாவட்ட மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் விரைவுச் சாலைகள் திட்டம் என்று எண்ணிலடங்காத திட்டங்கள் மாநில அளவில் சுமுகமாக நடப்பதற்கு தேவையான வழிமுறைகளை இவர்கள் செய்ய முடியும்.
அது மட்டுமல்ல, மத்திய அரசின் பல்வேறு அமைப்புகள் கொண்டு வரும் வளர்ச்சியை ஊக்குவிக்கும் பல்வேறு கட்டுமானத் திட்டங்களுக்கு எதிராக தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் பிரிவினை வாத நாசகார சக்திகள் மக்களை மூளைச்சலவை செய்து தமிழ்நாட்டில் ஆட்சி அதிகாரத்தில் இருப்போரை தங்களது ஊடக நண்பர்கள் உதவியோடு மிரட்டி அதை கொண்டு வராமல் தடுக்கும்போது அதை முறியடிக்கும் சக்தியாக பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்க முடியும்.
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (National Highways Authority of India) தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டிற்கு அடுத்த ஐந்து வருடங்களுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாயை வழங்கி இருக்கிறது.
இந்த நெடுஞ்சாலை பணிகள் எந்தவித பின்னைடைவும் இல்லாமல் முடிக்கப்படுமானால், ஓரளவு திறமையான தொழிலாளி (Semi-skilled), திறமையான தொழிலாளி (Skilled), சாலைப் பொறியாளர் (Civil Engineer) என்று பல லட்சம் பேருக்கு வேலை கிடைப்பதோடு, தமிழகம் விவசாயம், உற்பத்தி மற்றும் சேவை ஆகிய மூன்று துறைகளிலும் உலகத்திற்கே சவால் விடும் வகையில் முன்னேற முடியும்.
கடந்த ஏழு ஆண்டுகளில் மத்திய மோடி அரசு வருடாந்திர விலைவாசி உயர்வை விவசாய உற்பத்தி குறிப்பாக பருப்பு வகைகள், காய்கறி மற்றும் பழ உற்பத்தி அதிகரிப்பு, கலால் (Excise tax) மற்றும் மதிப்பு கூட்டு வரி (Value Added Tax) போன்றவற்றை நீக்கி விட்டு, அதை விட குறைவான வரி விகிதத்தில் சரக்கு மற்றும் சேவை வரி (Goods and Services Tax) கொண்டு வந்ததின் மூலமும், மத்திய ஆளும் அரசியல்வாதிகள் மட்டத்தில் ஊழல் இல்லாமல் இருப்பது, நலத்திட்டங்களில் உதவிகள் மிக சரியாக சுரண்டல் இல்லாமல் பயனாளிகளுக்கே செல்லும் வகையில் JAM (Jan Dhan வங்கி கணக்கு, Aadhar – ஆதார் அடையாள அட்டை, Mobile – மொபைல் போன் மூலம் நலத்திட்டத்தின் விவரங்கள் பயனாளிகளுக்கே நேரிடையாக என்று சேர்த்தல்) வழிமுறையை பயன்படுத்தி, நலத்திட்ட உதவிகள் சிந்தாமல் சிதறாமல் பயனாளிகளுக்கு சென்று சேர வழி அமைத்தது போன்ற செயல்பாடுகளின் மூலம், மத்திய அரசு 2014 முதல் இன்று வரை வருடாந்திர விலைவாசி உயர்வை ஐந்து சதவிகிதத்திற்கும் கீழே கட்டுக்குள் வைத்திருக்கிறது.
மக்கள் தொகை பெருக்கத்தை விட மிக அதிகமாக விவசாய உற்பத்தியைப் பெருக்கி, விளைபொருள்கள் விலை உயராமல் பார்த்துக்கொண்ட விவசாயிகளுக்கு வருடம் ரூபாய் 6000 கௌரவவத் தொகையாக கொடுத்து விவசாயிகளை மோடி அரசு ஊக்குவித்து வருகின்றது. 2009 முதல் 2014 வரையிலான மத்திய காங்கிரஸ் – திமுக ஆட்சியின் போது, வருடாந்திர விலைவாசி 9.85% ஆக இருந்தது என்பதை நினைவு கொண்டால் மோடி ஆட்சியின் மகத்துவம் புரியும்.
வளமான தமிழகத்தை முழு கவனத்துடன் அடுத்த ஐந்தாண்டுகளில் உருவாக்க தாமரை எங்கெல்லாம் நிற்கிறதோ அங்கெல்லாம் அதற்கு வாக்களித்து தமிழக மக்கள் ஜனநாயகக் கடமையை ஆற்ற வேண்டும் என்பதே இந்த கட்டுரை வாக்காளர்களிடம் வைக்கும் வேண்டுகோளாகும்.
- திருவண்ணாதபுரம் எஸ் இராமகிருஷ்ணன்
ஈமெயில்: ramakrishnan@iima.ac.in


