மணப்பாறை அருகே இருசக்கர வாகனம் மீது பின்னால் வந்த கார் மோதிய விபத்தில், தனியார் நிதி நிறுவன ஊழியர் உயிரிழந்தார்.
திண்டுக்கல் மவாட்டம் நத்தம் அருகே உள்ள வேப்பம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சிவராமன் (30). இவர் திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். நேற்று காலை பணிக்கு செல்வதற்காக, சிவராமன் தனது இருசக்கர வாகனத்தில் வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றார்.
வளநாடு அருகே திருச்சி – மதுரை நெடுஞ்சாலையில் கல்லாமேடு என்ற பகுதியில் சென்றபோது, சிவராமன் வாகனம் மீது எதிர்பாராத விதமாக பின்னால் திருச்சியில் இருந்து மதுரை நோக்கி வந்த கார் அதிவேகமாக மோதியது. பின்னர், சாலை தடுப்பை கடந்துசென்று எதிர்புறம் உள்ள சாலையில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் சிவராமன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், காரில் இருந்த இருவர் படுகாயம் அடைந்தனர். அவர்களை அந்த பகுதி மக்கள் மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து, தகவல் அறிந்த வளநாடு போலீசார், சிவராமன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.