தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கீழவடகரை அடுத்த பெருமாள்புரம் பகுதியை சேர்ந்தவர் வீரபத்திரன். இவருக்கு சுமதி என்ற மனைவியும், 10 வயதில் ஒரு பெண் குழந்தை மற்றும் 5 மாத ஆண் குழந்தை ஒன்றும் இருந்துள்ளது. சுமதி கணவன் வீரபத்திரனுக்கு தெரியாமல் கடன் வாங்கியதாகக் கூறப்படுகிறது.
இது வீரபத்திரனுக்கு தெரியவரவே மனைவியிடம் சண்டை போட்டுள்ளார். இதனால் மனமுடைந்த சுமதி அரளி விதையை அரைத்து பாலில் கலந்து குடிக்கலாம் என்று நினைத்து பாலில் கலந்துள்ளார்.
அப்போது பக்கத்துக்கு வீடு பெண் சுமதியை அழைக்கவே, அவர் பாலை வைத்து விட்டு வெளியில் சென்றுவிட்டார்.
அந்த சமயத்தில் சுமதியின் 5 மாத குழந்தை அழுதுள்ளது. பாலில் விஷம் கலந்துள்ளது தெரியாமல் சுமதியின் 10 வயது பெண், பாலை பாட்டிலில் ஊற்றி குழந்தைக்கு கொடுக்கவே குழந்தை குடித்துவிட்டு மயங்கியுள்ளார்.
இதையடுத்து மீண்டும் வீட்டுக்குள் வந்த சுமதி குழந்தை அரளிவிதை கலந்த பாலை குடித்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதை தொடந்து தனது சகோதரியுடன் தேனி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.
இந்நிலையில் சுமதி மற்றும் வீரபத்திரன் தலைமறைவாகியுள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், இருவரையும் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.