நடிகை சாந்தினி புகார் அளித்ததில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது செய்யப்பட்டது போல் தன்னுடைய புகாரில் சீமானை கைது செய்ய வேண்டும்.
தமிழகத்தில் சில ஆண்டுகளுக்கு முன்னர் சினிமா இயக்குனர் மற்றும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளருமான சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றிவிட்டதாக கூறி புகார் கூறி சர்ச்சையை ஏற்படுத்தியதன் மூலம் அறியப்பட்டவர் நடிகை விஜயலட்சுமி.
அதேபோல சமிபத்தில் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாக அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை சாந்தினி சென்னை காவல் துறையில் புகார் அளித்தார்.
கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக தன்னுடன் குடும்பம் நடத்தி விட்டு திருமணம் செய்யாமல் ஏமாற்றி வருகிறார் என்று குற்றம் சாட்டி இருந்தார்.
தற்போது மணிகண்டன் மீது காவல்துறையினர் சட்டரீதியாக நடவடிக்கை எடுத்து கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் இந்த சம்பவத்தை சுட்டிக்காட்டி நடிகை சாந்தினி புகார் அளித்ததில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது செய்யப்பட்டது போல், தன்னுடைய புகாரில் சீமானை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கையை முன் வைத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள காணொளியில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களால் கடந்த நான்கு வருடங்களாக நான் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறேன் அதுவும் சமூக வலைத்தளங்களில் மூலம் மட்டுமே என்னுடைய குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றேன்.
அதனை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை அமைச்சர் மணிகண்டன் அவர்கள் கைதாகும் பொழுது சீமான் அவர்கள் ஏன் கைதாகவில்லை என்ற ரீதியில் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் நான் எத்தனையோ ஆதாரங்களை நான் வெளியிட்ட பொழுதும் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை. 10 ஆண்டுகளுக்கு முன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தேன் ஆனால் அந்த வழக்கை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டார்கள் இதற்கு இயக்குனர் நடிகர் அமீர் உள்ளிட்டவர்களின் தலையீடு அதிகம் உள்ளதாகவும் கூறியுள்ளார்.
மேலும் சீமான் அவர்களுக்கு எதிராக இந்த வழக்கில் என்னிடம் நிறைய ஆதாரங்கள் உள்ளது எனவே இந்த ஆதாரங்கள் அனைத்தையும் திமுகவில் உள்ள மூத்த தலைவர்களிடம் இதனை தெரிவிக்க போவதாகவும் கூறிய அவர் இந்த வழக்கில் கிட்டத்தட்ட நான் பத்து வருடங்களாக நியாயம் கிடைக்காமல் போராடிக் கொண்டிருக்கிறேன் இந்த வழக்கில் திமுக சார்பில் இருந்து எனக்கு நிச்சயம் ஒரு விடிவு காலம் பிறக்கும் என்று நம்புவதாக கூறியுள்ளார்.