வந்தவாசி அருகே வளைகாப்பு விழாவிற்கு தனது பெற்றோர் வராததால் மனமுடைந்த 9 மாத கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே உள்ள சேனல் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேஷ். ஆட்டோ ஓட்டுனரான இவர் கடந்த ஓராண்டுக்கு முன்பு ஷீலா என்கிற விஜயசாந்தி (21)யை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இதனால் ஷீலாவின் பெற்றோர் அவரிடம் பேசாமல் இருந்து வந்துள்ளனர். இந்த நிலையில், 9 மாத கர்ப்பிணியான ஷீலாவுக்கு கடந்த வெள்ளிக்கிழமை கணவர் வீட்டார் வளைகாப்பு நடத்தினர். இதற்கு தனது பெற்றோர் வருவார்கள் என ஷீலா எதிர்பார்த்துள்ளார்.
ஆனால் அவர்கள் கலந்து கொள்ளவில்லை. இதனால் மனமுடைந்து காணப்பட்ட ஷீலா வீட்டின் பின்புறம் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த ராஜேஷ், தெள்ளார் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார். அதன் பேரில், போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, திருமணமாகி 9 மாதங்களில் ஷீலா தற்கொலை செய்துகொண்டதால் இந்த சம்பவம் குறித்து செய்யாறு வருவாய் கோட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.