
உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் இன்று காலமானார் அவருக்கு வயது 80.
மதுசூதனன் மறைவு அதிமுகவிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு என்று தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவைத்தலைவர் மதுசூதனன் மறைவை முன்னிட்டு அதிமுக சார்பில் இன்று முதல் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக அவைத்தலைவராக உள்ள மூத்த தலைவர் மதுசூதனன். கடந்த சில ஆண்டுகளாகவே இவரது உடல்நிலையில் சில பிரச்சினைகள் இருந்தன.
80 வயதான மதுசூதனன் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகராக 16 வயதில் ரசிகர் மன்றத்தை தொடங்கினார். எம்ஜிஆர் அரசியல் கட்சியை தொடங்கிய பின்னர் அதிமுக தொண்டராக இருந்து அரசியலுக்கு வந்தவர். சென்னையின் செல்வாக்கு மிக்க நபராக இருந்தவர் மதுசூதனன்.
எம்ஜிஆருக்குப் பிறகு ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவிலும் அவைத்தலைவராக இருந்தார். கடந்த 1991-96 வரையிலான முதல் ஜெயலலிதாவின் முதல் அமைச்சரவையிலேயே கைத்தறித்துறை அமைச்சராக இருந்துள்ளார்.
ஜெயலலிதா இவரை அதிமுக அவைத் தலைவராகவும் நியமித்திருந்தார். அவர் இருக்கும் வரை அவர்தான் என்றுமே அவைத் தலைவர் என்று கூறினார் ஜெயலலிதா.
2017ஆம் ஆண்டு ஒபிஎஸ், சசிகலா இடையே ஏற்பட்ட பிரச்னையால் ஓபிஎஸ் அணியில் இணைந்தார். மீண்டும் கட்சி ஒன்றான பின் மீண்டும் அதிமுக அவைத்தலைவர் ஆனார்.



