திரைப்படங்களில் வருவது போல் டபுள்-ஆக்ட் (இரட்டை வேடம்) செய்து 21 வயது இளம்பெண்ணை காதல் வலையில் வீழ்த்தி ஏமாற்றிய ஏமாற்றுக்காரனை போலீசார் கைது செய்ய தேடி வருகின்றனர்.
சென்னை அரும்பாக்கம் திருவீதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவன் வில்லாண்டர் பெனட் ராயன். இவன் போரூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறான். இவனுக்கு திருமணமாகி மனைவியும், குழந்தையும் உள்ளது.
இந்த நிலையில், இவன் பணிபுரிந்து வரும் தனியார் நிறுவனத்தில், இவன் உடன் பணிபுரிந்து வந்த ஆவடியை சேர்ந்த 21 வயது இளம்பெண்ணை காதல் வலையில் வீழ்த்தி, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இருவீட்டார் சம்மதத்துடன் திருமண நிச்சயதார்த்தை முடித்துள்ளான்.
இதற்கிடையே, அந்த 21 வயது இளம் பெண்ணிடம், அவரின் தோழிகள் ‘ஏற்கனவே திருமணம் முடிந்தவரை இரண்டாவதாக ஏன் திருமணம் செய்து கொள்கிறாய்?” என்று கேட்டுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த இளம்பெண் வில்லாண்டர் பெனட் ராயன் வீட்டுக்கு நேரடியாக சென்று விசாரித்துள்ளார்.
அப்போது அதற்கு வில்லாண்டர் பெனட் ராயன், “அது நான் அல்ல, எனது அண்ணன் வின்சென்ட். நாங்கள் இரட்டை பிறவிகள். அவருக்கு திருமணம் முடிந்து தற்போது குடும்பத்துடன் துபாயில் வசித்து வருகிறார். நாங்கள் இருவரும் பார்ப்பதற்கு ஒரே மாதிரியாக இருப்போம்” என்று திரைப்பட பாணியில் கதை அளந்து உள்ளார்.
மேலும், தான் அளந்துவிட்ட அந்த கதையை நம்ப வைக்க, தனது திருமணத்தின் போது மனைவி, தாய் மற்றும் தங்கையுடன் இருக்கும் புகைப்படத்தில், வேறு தோற்றத்தில் இருக்கும் தனது புகைப்படத்தை மார்பிங் செய்து அந்த இளம் பெண்ணிடம் காண்பித்துள்ளார்.
இதைவிட உச்சகட்டமாக இரட்டைப் பிறவிகள் என்பதற்கு போலியான ஆதார் கார்டு, வாக்காளர் அட்டை போன்றவற்றையும் தயாரித்து காண்பித்துள்ளார். ஆனால், இதனை நம்பாத அந்த இளம்பெண் கடந்த ஏப்ரல் மாதம் அரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதனையடுத்து போலீசார் இருவரையும் சமாதானம் செய்து வைத்தனர். ஆனால் திருமண நிச்சயதார்த்தத்தின் போது வாங்கிய 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை பணத்தை திருப்பிக் பெண்வீட்டார் கேட்டுள்ளனர்.
அப்போது ஒரு லட்சத்தை மட்டும் கொடுத்த ராயன் மீதி பணத்தை பிறகு தருவதாக தெரிவித்துள்ளான். ஆனால் மீதி பணத்தை தராமல் அந்த இளம் பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக சொல்லப்படுகிறது.
இதனையடுத்து அந்த இளம்பெண் ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை பெற்றுக்கொண்ட போலீசார், தலைமறைவாகியுள்ள ராயன் மற்றும் அவனின் தயை கைது செய்ய தேடி வருகின்றனர்.