திருத்தணி முருகன் கோவிலில், ஆவணி மாத கிருத்திகை விழாவில் பக்தர்கள் மலைப்படியில் பூஜை செய்து வழிபட்டனர். திருத்தணி முருகன் கோவிலில், ஆவணி மாத கிருத்திகையையொட்டி, அதிகாலை 5:00 மணிக்கு மூலவருக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் நடந்தது.
பின், தங்கவேல், தங்கக்கீரிடம் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது.காலை 9:30 மணிக்கு, உற்சவர் முருகப் பெருமானுக்கு காவடி மண்டபத்தில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.
இரவு 7:00 மணிக்கு உற்சவர் முருகப் பெருமான், வள்ளி, தெய்வானையுடன் மலைக்கோவில் உட்புறத்தில் வலம் வந்தார்.
கொரோனா தொற்று காரணமாக, அரசு அறிவிப்பின்படி நேற்று பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப் படவில்லை. இருப்பினும் திரளான பக்தர்கள் மலைக்கோவிலுக்கு செல்வதற்கு மலைப்படிகள் மற்றும் மலைப்பாதை ஆகிய இடங்களுக்கு வந்தனர்.
அங்கு பாதுகாப்பிற்கு இருந்த கோவில் ஊழியர்கள், மலைக்கோவிலுக்கு செல்ல அனுமதியில்லை என கூறியதால், படியில் கற்பூரம் ஏற்றி வழிபட்டு சென்றனர்.
அதே போல், ஒவ்வொரு கிருத்திகை தோறும் வளர்புரம் பகுதியில் இருந்து வரும் பஜனை குழுவினர் நேற்று, வழக்கம் போல பக்தி பாடல்கள் பாடியவாறு, மலைப்படிகள் வரை வந்து வழிபட்டு சென்றனர்.