லஞ்சம் வாங்கிய மோட்டார் வாகன பெண் ஆய்வாளர் கைது!

Published:

fake money
fake money

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில், மோட்டார் வாகன ஆய்வாளராக ஆர்.கலைச்செல்வி (45) என்பவர் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் தஞ்சாவூரில் உள்ள தனியார் வாகன விற்பனை நிறுவனத்தின் மேலாளர்கள் அருண், மற்றும் அந்தோணி யாகப்பா ஆகியோர் தஞ்சாவூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாரிடம் புகார் கொடுத்தனர்.

அதில், தங்களது நிறுவனத்தில் இருந்து புதிதாக விற்பனை செய்து, பதிவு செய்த லோடு ஆட்டோவுக்கு 2,500 ரூபாயும் ஏற்கனவே பதிவு செய்து ஆர்.சி.புக் வாங்க இரு வாகனங்களுக்கு 4,500 ரூபாயும் லஞ்சமாக தர வேண்டும் என புரோக்கர் கார்த்திகேயன் மூலம் கலைச்செல்வி கேட்டதாகவும், லஞ்சம் தர விரும்பாததால் புகார் அளிப்பதாகவும் தெரிவித்தனர்.

இந்த புகாரினை பெற்றுக் கொண்ட லஞ்ச ஒழிப்பு போலீஸார் பட்டுக்கோட்டைக்கு சென்று வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் மறைந்திருந்தனர்.

அப்போது 4,500 ரொக்கப்பணத்தில் ரசாயன பவுடர் தடவி அருண் மற்றும் அந்தோணி யாகப்பா இருவரும் புரோக்கர் கார்த்திகேயனிடம் வழங்கினர்.

ALSO READ:  டெட் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பில் உடனடி சட்ட நிவாரணம் தேவை!

அந்த பணத்தை கார்த்திகேயன் கலைச்செல்வியிடம் கொடுத்த போது லஞ்ச ஒழிப்பு போலீஸார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

பின்னர் அவர்கள் இருவரையும், அலுவலகத்திலேயே வைத்து, யார் யாரிடம் பணத்தை பெற்றுள்ளார்கள். அந்த பணத்தை என்ன செய்தார்கள் என தீவிரமாக விசாரித்து வருகின்றார்கள்.

மேலும் அவரிடமிருந்து லஞ்சப் பணம் 4,500 ரூபாய் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது. இச்சம்பவம் குறித்து வாகன ஓட்டிகள் தெரிவிக்கையில் பட்டுக்கோட்டையிலுள்ள மோட்டார் வாகன ஆய்வாளர் நேரிடையாக பணத்தை வாங்கமாட்டார்.

அதற்கென்றுள்ள புரோக்கர் மூலம் வாங்கி, மாலையில் செல்லும் போது பெற்றுக்கொள்வார். இந்த அலுவலகத்தில் பதிவு செய்யும் அனைத்து பணிகளுக்கும் லஞ்சமாக பணம் கொடுத்தால், தான் பணிகள் விரைவில் நடைபெறும்.

பைக் முதல் கனரக வாகனம் முதல் 300 முதல் 5 ஆயிரத்திற்கு மேல் தினந்தோறும் லஞ்சமாக பணம் வசூலிக்கப்படுகிறது. வாகன விற்பனையாளர்கள், வாகனத்திற்கு என்று நிர்ணயிக்கப்பட்ட பணத்தை கொடுத்து விடுவார்கள்.

அது மட்டும் இல்லாமல், வாகனத்தில் உள்ள சான்றிதழ்களில் ஏதேனும் குளறுபடிகள் இருந்தால், அதற்கேற்றார் போல் பணம் வசூலிப்பார்கள்.

ALSO READ:  FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

பட்டுக்கோட்டையில் எந்த பணிகளாக இருந்தாலும், பணம் இல்லை என்றால், நடைபெறாது என்பது எழுதப்படாத சட்டமாக இருக்கின்றது. இதனால் ஏழைகள், நடுத்தர மக்கள் அவதிக்குள்ளாகி வந்தனர்.

தற்போது புகார் கொடுத்தவர்களிடம் கறாராக பணத்தை கேட்டதால், வேறு வழியின்றி லஞ்ச ஒழிப்பு துறைக்கு புகாரளித்துள்ளனர்.

இதே போல் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள போக்குவரத்து அலுவலத்திலும் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் திடீர் சோதனை செய்யவேண்டும், புரோக்கர்கள் தவிர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Related articles

Recent articles

spot_img