மார்கழி திருவாதிரையை முன்னிட்டு சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.
நான்கு மாட வீதிகளிலும் ஆடி அசைந்து வந்த திருத்தேரின் அழகை பல்லாயிரக்கணக்கானவர்கள் கண்டு தரிசனம் செய்தனர்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆருத்ரா அபிஷேகம் நாளை அதிகாலையிலும் பிற்பகலில் ஆருத்ரா தரிசன காட்சி நடைபெறும்.
சிவபெருமானின் பஞ்சபூதத்தலங்களில் ஆகாயத்தலமாக போற்றப்படும் சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனம் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம் அதன்படி இந்த ஆண்டுக்கான மார்கழிமாத ஆருத்ர தரிசன திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
தினமும் வெவ்வேறு வாகனங்களில் பஞ்சமூர்த்திகளின் எழுந்தருளி அருள்பாலித்தனர்.
இந்த திருவிழா குறித்து ஏற்கனவே நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கொடியேற்றம், ஆருத்ரா தரிசன விழா உள்ளிட்டவற்றில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்ய அனுமதி கிடையாது என அறிவிக்கப்பட்டது. மேலும் தேரோட்டத்துக்கும் தடை விதிக்கப்பட்டது.
சிதம்பரத்தில் தேரோட்டம் நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என வலியுறுத்தி பக்தர்கள் மற்றும் இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தின. நேற்றிரவு சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
தில்லையில் தேரோட்டம் நடக்காவிட்டால் ஆளும் மன்னனுக்கு கேடு வரும் என்று கூறி பேட்டியளித்தார் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச். ராஜா. போராட்டம் நடத்தியாவது தேரோட்டத்திற்கு அனுமதி பெற வேண்டும் என்றும் கூறினார் ஹெச் ராஜா. நேற்றிரவு ஏராளமான சிவனடியார்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் சிதம்பரம் நடராஜர் கோவிலில் தேரோட்டம் நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.
கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி குறைந்த அளவிலான பக்தர்களுடன் தேரோட்டம் நடத்த மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
தேரோட்டம் நடத்த அனுமதி அளிக்கப்பட்டதை அடுத்து விடிய விடிய வேலைகள் நடைபெற்றன. இன்று அதிகாலையில் திருத்தேரில் இறைவன் நடராஜர் எழுந்தருளினார்.
பிள்ளையார், முருக பெருமான், நடராஜர் தேர் உள்ளிட்ட ஐந்து தேர்களும் நான்கு ரத வீதிகள் வழியாக பக்தர்களால் வடம் பிடித்து இழுத்துச்செல்லப்பட்டது.
இன்று பிற்பகல் வரை தேரோட்டம் நடைபெறும். திருத்தேரில் மூலவர் நடராஜர் காட்சி தருவார் என்பதால் புகைப்படங்கள் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.