பிரசித்திபெற்ற கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் , சுசீந்திரம் தாணுமாலயமூர்த்தி கோவிலில் மார்ச்1இல் மகா சிவராத்திரி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது.
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில்
மகா சிவராத்திரி விழா மார்ச் 1-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அன்று அதிகாலை 4-30 மணி முதல் இரவு 8-30 மணி வரை வழக்கம்போல் உள்ள அனைத்து பூஜைகளும் நடத்தி முடிக்கப்பட்டு கோவில் நடை அடைக்கப்படுகிறது.
அதன் பிறகு மகா சிவராத்திரி விழாவையொட்டி நள்ளிரவு 12 மணிக்கு பகவதி அம்மன் கோவில் நடை திறக்கப்பட்டு முதல் கால பூஜை நடக்கிறது.பின்னர் 12-30 மணிக்கு இரண்டாம் கால பூஜையும் அதிகாலை 1மணிக்கு 3-ம் கால பூஜையும் 1-30 மணிக்கு நான்காம் கால பூஜையும் நடக்கிறது.
ஒவ்வொரு கால பூஜையின் போதும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் விசேஷ பூஜையும் சிறப்பு வழிபாடுகளும் அலங்கார தீபாராதனையும் நடக்கிறது.
அதிகாலை 2 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படுகிறது. மீண்டும் மறுநாள்அதிகாலை 4:30 மணி முதல் கோவில் நடை திறக்கப்பட்டு வழக்கம் போல் உள்ள பூஜைகள் நடக்கிறது மகாசிவராத்திரியையொட்டி ஒவ்வொரு கால பூஜையிலும் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகிறார்கள்.
சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் சிவராத்திரி விழாவையொட்டி சுவாமிக்குதங்க அங்கி சார்த்தி சிறப்பு பூஜை நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் சிவராத்திரி விழாவையொட்டி நாளை (செவ்வாய்க்கிழமை) நான்கு கால சாம பூஜை நடக்கிறது.
நாளை.இரவு 11 மணிக்கு முதல் கால பூஜை தொடங்குகிறது. அப்போது தாணுமாலய சாமிக்கு நெய், தேன், இளநீர், பஞ்சாமிர்தம் போன்றவைகளால் அபிஷேகம் செய்யப்பட்டு சுவாமிக்கு தங்க அங்கி சார்த்தி முதல் கால பூஜை நடக்கிறது.
நள்ளிரவு 12.30 மணிக்கு இரண்டாவது கால பூஜையும், மறுநாள் அதிகாலை 1.30 மணிக்கு மூன்றாவது கால பூஜையும், 2.30 மணிக்கு நான்காம் கால பூஜையும் நடைபெறுகிறது.
அதனை தொடர்ந்து 4 மணிக்கு கோவிலை சுற்றி ஸ்ரீபலி விழாவும் நடக்கிறது.
சிவராத்திரியன்று இரவு முழுவதும் கோவில் நடை திறக்கப்பட்டிருக்கும். 12 சிவாலயங்களிலும் சிவாலய ஓட்டத்தில் பங்கேற்று ஓடி வரும் பக்தர்கள் இறுதியாக சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலுக்கு தரிசனம் செய்ய வருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.








