சர்வதேச மகளிர் தினம் இன்று உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது
ஐ.நா.சபையால் அங்கீகரிக்கப்பட்ட இந்நாள் பல நாடுகளில் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டிருப்பது பெண் இனத்தின் பெருமைகளை மற்றவர்கள் மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள் என்பதையே காட்டுகிறது.
-இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மகளிர் தின
வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார்
அனைத்து துறைகளிலும் முன்மாதிரியான பங்களிப்பை செய்து வரும் பெண்களின் பாதுகாப்பு மற்றும் கண்ணியத்தை உறுதிப்படுத்தவும், அவர்களின் இலக்குகளை அடைவதற்கான வாய்ப்புகளை வழங்கவும் நாம் உறுதி ஏற்போம்.என குடியரசுத் தலைவர் வாழ்த்துச்செய்தியில் கூறியுள்ளார்.
இந்தநிலையில் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி வழங்கப்படும் மத்திய அரசின் ‘நாரி சக்தி புரஸ்கார்’ விருதுக்கு தேர்வாகியுள்ள பெண்களுடன், பிரதமர் நரேந்திர மோடி நேற்று கலந்துரையாடினார்.
சர்வதேச மகளிர் தினம் மார்ச் 8இன்று கொண்டாடப்படுகிறது. ஆண்டு தோறும் மகளிர் தினத்தையொட்டி மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் தொழில், விவசாயம், புதுமை, சமூகப் பணி, கல்வி மற்றும் இலக்கியம், மொழியியல், கலை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பெண்களை ஊக்குவிக்கும் வகையில் ‘நாரி சக்தி புரஸ்கார்’ விருது வழங்கப்படுகிறது. 2020 மற்றும் 21ம் ஆண்டுகளில் தலா 14 பேர் விருதுக்கு தேர்வாகி உள்ளனர். இவர்களுக்கு, இன்று டில்லியில் நடைபெறும் விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் விருதுகளை வழங்க உள்ளார்.
விருது பெறும் கடற்படை கேப்டன் ராதிகா மேனன், தொழில் முனைவோர் அனிதா குப்தா, இயற்கை விவசாயி மற்றும் பழங்குடியின ஆர்வலர் உஷாபென் தினேஷ்பாய் வாசவா, இன்டெல்- இந்தியா நிறுவன தலைவர் நிவ்ருதி ராய். மாற்றுத்திறனானி கதக் நடன கலைஞர் சைலி நந்த்கிஷோர் உள்ளிட்டோர் நேற்று டில்லி வந்தனர். அவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார்.
சர்வதேச மகளிர் தினத்தையொட்டி புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் டுவிட்டரில், உலக அளவில் பெண்களின் மகத்தான சாதனைகளைப் போற்றும் வகையில் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. பெண்களுக்கான அரசியல், சமூக, பொருளாதாரப் பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டியது நம் அனைவரின் கடமையாகும் என கூறியுள்ளார்.
சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, கூகுள் நிறுவனம் இன்று சிறப்பு ‘டூடுல்’ வெளியிட்டது.
சென்னை அடுத்த செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில், பல்லவர் கால நினைவுச் சின்ன சிற்பங்கள் உள்ளன.இங்குள்ள, கடற்கரைக் கோவில், ஐந்து ரதங்கள், அர்ச்சுனன் தபசு மற்றும் குடவரைகள் ஆகியவற்றை, தொல்லியல் துறை குழு சின்னங்களாக வகைப்படுத்தியுள்ளது. இவற்றை காண, சுற்றுலாப் பயணியரிடம், நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இன்று சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, உலகப் புகழ்பெற்ற சுற்றுலாதலமான மாமல்லபுரத்தில் அனைத்து பயணியரும், நுழைவுக் கட்டணம் இன்றி இலவசமாக அனுமதிக்கப்படுவர் என, அறிவிக்கப்பட்டுள்ளது.






