அரசுப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கு தகுதியானவர்களின் விவரங்களை அனுப்ப பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுகுறித்து அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் பள்ளிக்கல்வி இணை இயக்குநர் நரேஷ் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், “அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் பதவிக்கு தகுதி பெற்ற இடைநிலை, உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் சிறப்பு ஆசிரியர்கள் விவரப் பட்டியலை தயாரித்து துரிதமாக அனுப்பி வைக்க வேண்டும். கடந்த ஜனவரி 1ஆம் தேதி நிலவரப்படி பாட வாரியாக பட்டியல் தயாரிக்க வேண்டும்.
இரட்டைப் பட்டம் பெற்றவர்கள், ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளானவர்கள், புகார்கள் நிலுவையில் உள்ளவர்களை பரிந்துரை செய்யக் கூடாது.
தகுதியானவர்களின் பெயர்கள் விடுபட்டதாக புகார் வந்தால், சம்பந்தப்பட்ட முதன்மை கல்வி அதிகாரிகளே பொறுப்பு. எனவே, இதில் கூடுதல் கவனம் செலுத்தி பணிகளை முடிக்க வேண்டும்.
ஏப்.27ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை அந்தந்த மாவட்டங்களுக்கு ஒதுக்கிய தேதிகளில் தங்கள் கையொப்பத்துடன் பட்டியலை அனைத்து முதன்மை கல்வி அதிகாரிகளும் சமர்ப்பிக்க வேண்டும்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது