சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே 14 வயது சிறுமியை தலை துண்டித்து கொலை செய்த வழக்கில் இன்று வாலிபருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் தளவாய்ப்பட்டி தெற்கு காட்டுக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ்குமார் (25). இவருக்கு திருமணமாகி ஒரு ஆண் குழந்தை உள்ளது.
இவர் கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 23-ந் தேதி அதே பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமியின் வீட்டிற்குள் அரிவாளுடன் புகுந்து அவரது தாயாரை தாக்கிவிட்டு ஜாதி பெயரை சொல்லி ஆபாசமாக பேசியபடியே சிறுமியின் தலையை அறுத்து தெருவில் வீசி எறிந்தார்.
தினேஷ்குமாரின் மனைவி மற்றும் சகோதரர் சசிகுமார் ஆகியோர் தினேஷ்குமாரை ஆத்தூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். சிறுமியின் தலையை அறுத்து சாலையில் வீசியெறிந்த சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த வழக்கு சேலம் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. திங்கட்கிழமை வழங்கப்பட்ட தீர்ப்பில் தினேஷ்குமார் குற்றவாளி என நீதிபதி முருகானந்தம் அறிவித்தார். இதையடுத்து தீர்ப்புகள் விவரம் இன்று அறிவிக்கப்படும் என்று நீதிபதி தெரிவித்தார். சிறையில் இருந்து இன்று காலை பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்ட தினேஷ்குமார் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டதும் தண்டனை விபரங்கள் அறிவிக்கப்பட்டது.
குற்றம் சட்டப்பட்ட தினேஷ்குமாருக்கு தூக்கு தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி முருகானந்தம் உத்தரவிட்டார்.





