தஞ்சாவூர் களிமேடு தேர் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் ஆறுதல் கூறினார்.
தஞ்சை அருகே களிமேடு கிராமத்தில் இன்று அதிகாலை நடந்த தேரோட்டத்தின் போது, மின் கம்பியில் தேர் உரசியதில் மின்சாரம் பாய்ந்து 11 பேர் பரிதாபமாக இறந்தனர். 15 பேர் காயமடைந்தனர். விபத்து குறித்து கள்ளப்பெரம்பூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து மதுரைக்கு விமானத்தில் சென்று அங்கிருந்து காரில் தஞ்சாவூர் சென்றார். பின்னர் தேர் விபத்தில் நேரில் சென்று உயிரிழந்தவர்களின் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். அவர்களது குடும்பத்தாருக்கு நிவாரண உதவி அளித்து ஆறுதலும் கூறினார்.
பின்னர் விபத்து நடந்த இடத்தை பார்வையிட்ட முதலமைச்சர் அங்கு உள்ள அதிகாரியிடமும் பொதுமக்களிடமும் விபத்து குறித்து கேட்டறிந்தார். பிறகு அங்கிருந்து காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று காயமடைந்தவர்களை பார்வையிட்டார். அப்போது அவர்களது உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்.






