
கோயம்பேடு சந்தையில் எத்திலின் என்ற ரசாயனம் கலந்த திரவத்தை பயன்படுத்தி பழுக்க வைத்த 8000 கிலோ பழங்களை உணவு பாதுகாப்புத் துறையினர் பறிமுதல் செய்தனர்.
கோயம்போடு சந்தைக்கு ஆஸ்திரேலியா, அமெரிக்கா, நீயூசிலாந்து, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து ஆப்பிள், ஆரஞ்ச், திராட்சை , கிவி உள்ளிட்ட பழங்கள் விற்பனைக்கு வருகின்றன.
தமிழகத்தில் தற்போது மாம்பழ சீசன் களைகட்ட துவங்கியுள்ளது.
இதையடுத்து கோயம்பேடுக்கு மாம்பழங்களும் அதிகளவில் விற்பனைக்கு வருகின்றன. மாங்காய் இயற்கையாகப் பழுக்க இரு வாரங்கள் ஆகும் என்பதால், லாப நோக்கிற்காக ‘கால்சியம் கார்பைடு’ என்ற வேதிக்கல் மற்றும் எத்திலின் என்ற ரசாயனம் கலந்த திரவத்தை பயன்படுத்தி செயற்கையாக பழுக்க வைக்கின்றனர்.
இந்த ரசாயனத்தில் இருந்து எந்த வாசனையும் வராததால், இதை கண்டுபிடிக்க முடிவதில்லை. இந்த பழங்களை உண்போருக்கு உடல் நல பாதிப்பு ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
இந்நிலையில் நேற்று கோயம்போடு பழ சந்தையில், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடியாக ஆய்வு மேற்கொண்டனர். அதில், 75 கடைகளில் எத்திலின் பயன்படுத்தியது கண்டறியப்பட்டது.
இதையடுத்து, 7,000 கிலோ மாம்பழம், 1,000 கிலோ பட்டர் பழம் என, மொத்தம் 8 டன் பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக, நான்கு கடைகளுக்கு நோட்டீசும் வழங்கப்பட்டுள்ளது.




