கான்பூர்: ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த இந்த்ரேஷ் குமாரைச் சந்தித்த முஸ்லிம் மதகுரு அவரிடம் 6 கேள்விகள் எழுப்பினார். இதனை அவர் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். உத்தரப் பிரதேச மாநிலம், கான்பூரில் சன்னி உலமா கவுன்சில் பொதுச் செயலாளர் முகமது சலீஸ் செவ்வாய்க்கிழமை நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்தது…. ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பிரசாரகரும், மூத்த நிர்வாகியுமான இந்திரேஷ்ஜியை நாங்கள் ஒரு தூதுக் குழுவாகச் சென்று சந்தித்துப் பேசினோம். அப்போது அவரிடம் நாங்கள் 6 கேள்விகள் எழுப்பினோம். அந்தக் கேள்விகளுக்கு அவரிடம் அப்போது பதில்கள் இல்லை. நாங்கள் எழுப்பிய அந்த 6 கேள்விகள்:
- இந்தியாவை ஆர்.எஸ்.எஸ்., ஒரு இந்து நாடாக கருதுகிறதா?
- இந்தியாவை இந்து நாடாக மாற்றுவதற்கு ஒரு வடிவத்தை ஆர்.எஸ்.எஸ். தயாரித்திருக்கிறதா?
- இந்து நாடு, இந்து மத நூல்களின்படி அமையுமா அல்லது ஆர்.எஸ்.எஸ். புதிய சித்தாத்தங்களை வகுத்திருக்கிறதா?
- மத மாற்றத்தை விரும்புகிறீர்களா?
- எந்த மாதிரியான தேசப்பற்றினை முஸ்லிம்களிடமிருந்து ஆர்.எஸ்.எஸ். விரும்புகிறது?
- இஸ்லாமிய சமயத்தை ஆர்.எஸ்.எஸ். எப்படி பார்க்கிறது?
சுமார் 90 நிமிடம் நாங்கள் நடத்திய சந்திப்பின்போது, நாங்கள் ஒரு மாநாட்டைக் கூட்ட வேண்டும் என்றும், அந்த மாநாட்டில் நாங்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளிப்போம் என்றும் அவர் கூறினார். ஓர் அறைக்குள் இந்தக் கேள்விகளுக்கு நீங்கள் பதில் அளிக்க முடியாதபோது, மாநாட்டில் நீங்கள் எப்படி பதில் அளிப்பீர்கள்? என்று கேட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.


