முதல் முறையாக தேசிய கொடியை உருவாக்கி டெல்லிக்கு அனுப்பிய ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டத்தை சேர்ந்தவர் கண்டசாலா சீதா மகாலட்சுமி மரணமடைந்தார்.
ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டத்தை சேர்ந்தவர் கண்டசாலா சீதா மகாலட்சுமி ( 100). நாடு சுதந்திரம் அடைந்ததும் முதல் முறையாக சீதா மகாலட்சுமி தேசிய கொடியை உருவாக்கி டெல்லிக்கு அனுப்பினார். அவர் அனுப்பிய தேசியக்கொடி டெல்லியில் உள்ள கொத்தளத்தில் ஏற்றப்பட்டது. இந்த நிலையில் வரும் ஆகஸ்ட் 2-ந் தேதி தேசியக்கொடி தின விழாவில் கலந்துகொள்ள சீதா மகாலட்சுமிக்கு டெல்லியில் இருந்து அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டு இருந்தது.
அவரை டெல்லிக்கு அழைத்துச் செல்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஆந்திர மாநில அரசு செய்து வந்தது. இந்த நிலையில் வயது மூப்பு காரணமாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சீதா மகாலட்சுமி நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி இறந்தார். அவரது இறப்பு குறித்து தகவல் அறிந்த முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி நேரில் வந்து அஞ்சலி செலுத்தி அவருடைய குடும்பத்தாருக்கு ரூ.75 லட்சம் உதவித்தொகை வழங்கப்படும் என அறிவித்தார்.
இதேபோல் முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட அரசியல் கட்சியினர் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் அவரது மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.





