கேரள மாநிலம் கொச்சியில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் ரூ.60 கோடி மதிப்பிலான போதைப்பொருளை அதிகாரிகள் இன்று பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த கடத்தல் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் கொச்சி விமான நிலையத்தில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக விமான நிலைய அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனை தொடர்ந்து ஜிம்பாவே நாட்டில் இருந்து கத்தார் வழியாக கொச்சி வந்த பாலக்காட்டை சேர்ந்த முரளிதரன் என்பவரின் உடைமைகளை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அப்போது, அந்த நபர் கொண்டு வந்த சூட்கேசில் 30 கிலோ போதைப்பொருள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து முரளிதரனிடமிருந்து போதைப்பொருளை கைப்பற்றிய அதிகாரிகள் இது குறித்து போதைப்பொருள் தடுப்பு பிரிவிடம் தெரிவித்தனர். இதையடுத்து, முரளிதரனை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட 30 கிலோ போதைப்பொருளின் மதிப்பு 60 கோடி ரூபாய் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.




