காவிரியில் கர்நாடக அரசு புதிய அணை கட்டும் விவகாரத்தில், அதற்கு தடை விதிக்கும் வகையில் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை விரைவுபடுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். தமிழக சட்டப் பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதத்தில் தேமுதிக உறுப்பினர் பார்த்திபன் கேள்விக்கு பதிலளித்துப் பேசியபோது அவர் இவ்வாறு தெரிவித்தார். முன்னதாக, காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் 2 புதிய அணைகளைக் கட்டுவதற்கு கர்நாடகம் முயற்சித்து வருகிறது. இதைத் தடுப்பதற்கு தமிழக அரசு முயற்சிக்க வேண்டும். முதல்வர் தலைமையில் அனைத்துக் கட்சி உறுப்பினர்கள் தில்லி சென்று, பிரதமரிடம் நேரில் வலியுறுத்த வேண்டும் என்று பார்த்திபன் சட்டமன்றத்தில் பேசினார். அவரது பேச்சுக்கு பதிலளிக்கும் வகையில், முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் குறுக்கிட்டுப் பேசினார். அப்போது அவர், “மேகதாதுவில் அணை கட்டும் முயற்சி தொடர்பான செய்திகள் வந்த உடனே, பிரதமருக்கு 2014 நவம்பர் 12-ஆம் தேதி கடிதம் ஒன்று எழுதினேன். அதில், தமிழகத்தின் அனுமதி பெறாமல் கர்நாடக அரசின் எந்தவொரு பாசனத் திட்டத்துக்கும் மத்திய அரசின் சுற்றுச் சூழல்-வனங்கள் அமைச்சகமும் நீர் ஆதாரத் துறை அமைச்சகமும் ஒப்புதல் வழங்கக் கூடாது என்று வலியுறுத்தினேன். மேலும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரை உச்சநீதிமன்றத்தில் உள்ள வழக்குகள் முடிவுக்கு வரும் வரையில் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் 2014 நவம்பர் 18-ஆம் தேதி தமிழக அரசு சார்பில் இடைக்கால மனு ஒன்றும் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கிடையில், உச்ச நீதிமன்றத்துக்குத் தெரிவிக்காமல் திட்டத்தை நிறைவேற்றப் போவதில்லை என்று உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசும் தெரிவித்தது. அதன் பிறகு, 2014 டிசம்பர் 5-ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையிலும் இதே கோரிக்கையை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில், இது தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றத்தில் விரைவாக எடுத்துக் கொள்வதற்கான சாத்தியக் கூறுகளைத் தமிழக வழக்குரைஞர்களுடன் ஆலோசித்து, மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்றார்.

