![ஆசிரியர்களின் பணிச்சுமையை குறைக்க பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை.. 1 images 67 2](https://dhinasari.com/wp-content/uploads/2022/08/images-67-2.jpeg)
ஆசிரியர்களின் பணிச்சுமையை குறைக்க அரசு பள்ளியில் தேவையற்ற 11 பதிவேடுகள் நீக்கப்பட்டன.ஆசிரியர்களின் நலன் சார்ந்த நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.
ஆசிரியர்களின் பணிச்சூழல் இணக்கமான முறையில் இருப்பதை உறுதி செய்யவும், தேவையற்ற நிர்வாக பணிச்சுமையை குறைக்கவும் அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் பின்பற்றப்பட்ட தேவையற்ற பதிவேடுகள் நீக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்தார்.
ஆசிரியர்கள் தங்களது பணி நேரத்தை மாணவர்களின் கற்றல், கற்பித்தல் பணிக்காக முழுமையாக ஈடுபடுத்தி கொள்ளும் வகையில் பள்ளி பதிவேடுகளை கணினி மயமாக்கப்படும் என்று மானிய கோரிக்கையின்போது தெரிவித்தார். இந்த அறிவிப்பினை செயல்படுத்தும் வகையில் அரசாணை வெளியிடப்பட்டது. அதன்படி தேவையற்ற 11 பதிவேடுகளை நீக்க கல்வித்துறை அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வி ஆணையர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அந்த வகையில் கருவூல பதிவேடு, சம்பள பிடித்தம் பதிவேடு, கூடுதல் பண பதிவேடு, நிரந்தர சம பதிவேடு, நிலுவையில் உள்ள சிறப்பு கட்டண பதிவேடு, அபராத பதிவேடு, பில் பதிவேடு, தற்காலிக பதிவேடு உள்ளிட்ட 11 பதிவேடுகளை நீக்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது. மேலும் 81 பதிவேடுகளை கல்வி தகவல் மேலாண்மை முறைமை வாயிலாக கணினியில் மட்டும் பராமரித்திடவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. எண்ணும் எழுத்தும் திட்டத்தை செயல்படுத்தும் 1, 2 மற்றும் 3-ம் வகுப்பு ஆசிரியர்கள் பாடக்குறிப்பேடு மட்டும் பராமரித்தால் போதுமானது.
இதைத் தவிர வேறு எந்தவொரு பதிவேட்டையும் பராமரிக்க தேவை இல்லை என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் 4 முதல் 12-ம் வகுப்பு பாட ஆசிரியர்களும் பாடக்குறிப்பேடு மட்டும் பராமரித்தல் போதுமானது. பாடத்திட்டம், பணி செய் பதிவேடு ஆகிய பதிவேடுகளை பராமரிக்க தேவையில்லை என அனைத்து தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்த வேண்டும் என்று சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.