மத சண்டைகள் தீர பொது சிவில் சட்டம், ஒரே மாதிரியான குடும்பக் கட்டுப்பாட்டு முறை தேவை: எச்.ராஜா

Published:

raja சென்னை: நாட்டில் மத சண்டைகள் தீர வேண்டுமானால், கட்டாய மதமாற்ற தடை சட்டம், அனைவருக்கும் பொதுவான சிவில் சட்டம், எல்லோருக்கும் ஒரே மாதிரியான குடும்ப கட்டுப்பாட்டு முறை ஆகியவற்றை கொண்டு வரவேண்டும் என பா.ஜ.க., தேசியச் செயலாளர் எச்.ராஜா கூறினார். சென்னையில் பா.ஜ.க., தலைமை அலுவலகமான கமலாலயத்தில், தேசியச் செயலாளர் எச்.ராஜா நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர்… இந்துக்கள் சிறுபான்மையினராகும் அச்சத்தாலேயே தாய் மதம் திரும்பும் நிகழ்ச்சிகள் நடக்கின்றன. கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும் மத மாற்றத்தை கடுமையாகக் கடைப்பிடிக்கின்றனர். இதனால், இன்னும் 100 ஆண்டுகளில் இந்துக்கள் சிறுபான்மையினர் ஆகிவிடுவார்கள் என்றும், அதன் பிறகு காஷ்மீரில் இந்துக்களுக்கு என்ன நடக்கிறதோ? அதுதான் நாடு முழுவதும் நடைபெறும் என்ற அச்ச உணர்வு இந்து இயக்கத் தலைவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. அதனால் நாமும் ஏன் மதமாற்றம் செய்யக்கூடாது என்ற நிலைக்கு அவர்கள் வந்துள்ளனர். ஆனால், இந்த எண்ணம் பா.ஜ.க.வுக்கு கிடையாது. இந்துக்களின் விழாக்களில் யாரையும் மதம் மாறுங்கள் என்றோ, பிற மதத்தை இழிவுபடுத்தியோ கூறுவதில்லை. ஆனால், கிறிஸ்தவர்கள் தங்களின் பிரார்த்தனைக் கூட்டங்களில் இயேசுவைத் தவிர பிசாசுகளை வணங்காதீர்கள் என்று இந்துக் கடவுள்களை இழிவுபடுத்துகின்றனர். பொதுவாக மத சண்டைகள் தீர வேண்டுமானால், கட்டாய மதமாற்ற தடை சட்டம், அனைவருக்கும் பொதுவான சிவில் சட்டம், எல்லோருக்கும் ஒரே மாதிரியான குடும்ப கட்டுப்பாட்டு முறை ஆகியவற்றை கொண்டு வரவேண்டும்… என்றார் எச்.ராஜா. மேலும், பொங்கல் விழாவையொட்டி, தமிழகத்தின் தென் மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு நடத்துவது வழக்கம். ஆனால், கடந்த 2007-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தின் போது, தமிழக அரசு கலந்து கொள்ளவில்லை. தமிழக அரசின் இந்தத் தவறான கொள்கையால், கடந்த மே மாதம், மராட்டியம் உள்ளிட்ட மற்ற மாநிலங்களிலும் ஜல்லிக்கட்டு, மாட்டு வண்டி பந்தயம் நடத்துவதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதுபற்றி, பா.ஜ.க. தேசியத் தலைவர் அமித்ஷா சென்னை வந்திருந்தபோது, அவரிடமும், தொடர்ந்து கடந்த ஜனவரி 13-ந் தேதி, நாடாளுமன்றத்தில் உள்ள அனைத்து எம்.பி.க்களுக்கும் கடிதம் எழுதினேன். அதில் பலர் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர். இதன் தொடர்ச்சியாக, வருகிற நாடாளுமன்ற கூட்டத்தொடரில் காட்சிப் பொருள் பட்டியலில் இருந்து எருதின் பெயரை நீக்கி சட்டத்திருத்தம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது… என்றார். அன்புமணியை பாமக.,வின் முதலமைச்சர் வேட்பாளராக அந்தக் கட்சி அறிவித்திருப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த எச்.ராஜா, டாக்டர் அன்புமணி ராமதாசை முதல்-அமைச்சர் வேட்பாளராக அறிவித்து இருக்கும் பா.ம.க.வின் செயல்பாடு கூட்டணி தர்மத்திற்கு எதிரானது. அதற்கு பா.ஜ.க., மேலிடம் தகுந்த நேரத்தில் தகுந்த நடவடிக்கை எடுக்கும் என்றார். முன்னதாக, பாமக., தனது தலைமையை பாஜக., ஏற்க வேண்டும் என்று கூறியிருந்தது.

Related articles

Recent articles

spot_img