உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக யு.யு.லலித் பதவியேற்பு..

Published:

உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக யு.யு.லலித் இன்று பதவியேற்றுக் கொண்டார். குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற இந்த விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவருக்கு பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.

பிரதமர் நரேந்திர மோடி, சட்டத் துறை அமைச்சர் கிரண் ரிஜூஜூ உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள், உச்சநீதிமன்ற நீதிபதிகள் உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டனர். 

உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக பதவியேற்றுள்ள யு.யு.லலித்(உதய் உமேஷ் லலித்) 74 நாள்கள் மட்டுமே பதவியில் இருப்பார், வருகிற நவம்பர் 8 ஆம் தேதி ஓய்வு பெறுகிறார். 

நீதித்துறையில் வெளிப்படைத் தன்மை, வழக்குகளை விரைந்து முடித்தல் உள்ளிட்ட முக்கிய நடவடிக்கைகளை இவர் மேற்கொள்ளவிருப்பதாகக் கூறப்படுகிறது. முன்னதாக, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த என்.வி.ரமணாவின் பணிக்காலம் நேற்றுடன் (ஆக.26) முடிவடைந்தது. கடந்த 2021 ஏப்ரல் மாதம் முதல் அவர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்தார். 

முன்னதாக உச்சநீதிமன்றத்தின் 49-ஆவது தலைமை நீதிபதியாக யு.யு.லலித் (உதய் உமேஷ் லலித்) புதன்கிழமை நியமனம் செய்யப்பட்டாா். அந்த நியமன உத்தரவில் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு கையொப்பமிட்டாா்.

ALSO READ:  குடிமக்களே தெய்வங்கள்: 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி உருக்கம்!

முன்னதாக, உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக யு.யு.லலித் பெயரை வெள்ளிக்கிழமை ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி என்வி.ரமணா அண்மையில் பரிந்துரை செய்திருந்தாா்.

உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பதவியானது பணிமூப்பின் அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது. பொறுப்பில் உள்ள தலைமை நீதிபதி தான் ஓய்வு பெறுவதற்கு முன்னதாக, அடுத்த தலைமை நீதிபதி யாா் என பரிந்துரைத்து அறிவிப்பது நடைமுறையில் உள்ளது.எனவே, அடுத்த தலைமை நீதிபதியாக யாரை நியமிக்கலாம் எனப் பரிந்துரைக்குமாறு மத்திய சட்ட அமைச்சகம் முந்தைய தலைமை நீதிபதி என்.வி.ரமணாவுக்கு கடிதம் எழுதியிருந்தது. அதன்படி, நீதிபதி யு.யு.லலித் பெயரை தலைமை நீதிபதி என்.வி.ரமணா பரிந்துரை செய்தாா்.

அந்தப் பரிந்துரை ஏற்கப்பட்டு, நியமன உத்தரவில் குடியரசுத் தலைவா் புதன்கிழமை கையொப்பமிட்டதன் மூலமாக, உச்சநீதிமன்றத்தின் 49-ஆவது தலைமை நீதிபதியாக யு.யு.லலித் நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.

இதுகுறித்து மத்திய சட்ட அமைச்சகம் வெளியிட்ட அறிவிக்கையில், ‘அரசியமைப்புச் சட்டப் பிரிவு 124, துணைப் பிரிவு (2) அளித்துள்ள அதிகாரத்தின் அடிப்படையில், உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக யு.யு.லலித்தை குடியரசுத் தலைவா் நியமித்துள்ளாா். வரும் ஆகஸ்ட் 27-ஆம் தேதிமுதல் இந்த நியமனம் நடைமுறைக்கு வரும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ:  சதுரகிரி கோவிலுக்கு தாணிப்பாறை வழியாக மட்டும் செல்ல வேண்டும்: ஆட்சியர் உத்தரவு!
1.jpeg 1 - 2026

நேரடி நியமனம் பெறும் இரண்டாவது தலைமை நீதிபதி: தலைமை நீதிபதியாக யு.யு.லலித் நியமிக்கப்பட்டதன் மூலமாக, வழக்குரைஞராக இருந்து நேரடியாக உச்சநீதிமன்ற நீதிபதியாகவும், பின்னா் தலைமை நீதிபதியாகவும் ஆகும் இரண்டாவது நபா் என்ற பெருமையை அடைந்துள்ளாா்.

பிரபல மூத்த வழக்குரைஞராக இருந்து வந்த யு.யு.லலித், கடந்த 2014-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13-ஆம் தேதி நேரடியாக உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டாா்.

இவருக்கு முன்பாக, நீதிபதி எஸ்.எம்.சிக்ரி, வழக்குரைஞராக இருந்து நேரடியாக உச்சநீதிமன்ற நீதிபதியாகவும், அதன் பிறகு நாட்டின் 13-ஆவது தலைமை நீதிபதியாகவும் கடந்த 1971-ஆம் ஆண்டு ஜனவரியில் பதவியேற்றாா்.

என்.வி. ரமணா வெள்ளிக்கிழமை ஓய்வு காரணமாக, உச்சநீதிமன்றத்தில் நேற்று ஒருநாள் அவர் விசாரிக்கும் வழக்குகள் நேரலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img