உத்தரப் பிரதேச மாநிலம் காசியில் நடந்து வரும் ‘காசி தமிழ் சங்கமம்’ நிகழ்வில் பங்கேற்க தமிழகத்தில் இருந்து மொத்தம் 2,592 பேர் பயணம் செய்துள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
சென்னை ஐ.ஐ.டி., மற்றும் பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய ‘காசி தமிழ் சங்கமம்’ நிகழ்ச்சி உத்தரபிரதேச மாநிலம், காசியில் நவ.16ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சி வரும் டிச.16 அன்று முடிவடைகிறது.
காசிக்கும் தமிழகத்துக்கும் இடையே அமைந்திருக்கும் தொன்மையான நாகரிக பிணைப்பையும், பல நுாற்றாண்டு கால அறிவுப் பிணைப்பையும் மீட்டுருவாக்கம் செய்வதற்காக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நவ.17ம் தேதி, முதல் ரயிலில் புறப்பட்டுச் சென்ற குழுவினரை சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, கொடியசைத்து வழியனுப்பி வைத்தார். தொடர்ந்து, பல்வேறு ஊர்களில் இருந்து இயக்கப்பட்ட ரயில்களில் தலா மூன்று பெட்டிகள் இணைக்கப்பட்டு, மாணவர்கள், தமிழ் ஆர்வலர்கள், ஆன்மிக தலைவர்கள் என பலரும் பயணம் செய்தனர்.
இந்த நிகழ்வின் நிறைவுப் பயணமாக 216 பேர் அடங்கிய குழுவினர், நேற்று சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து பீஹார் மாநிலம் கயா செல்லும் வாராந்திர ரயிலில் பயணம் செய்தனர்.
காசி தமிழ் சங்கமம் நிகழ்வில் பங்கேற்க, தமிழகத்தில், பல்வேறு பகுதிகளில் இருந்து இயக்கப்பட்ட 12 விரைவு ரயில்களில் இதற்காக ஒதுக்கப்பட்ட 36 பெட்டிகளில் மொத்தம் 2,592 பேர் பயணம் செய்துள்ளனர் என்று, தெற்கு ரயில்வே நேற்று தெரிவித்துள்ளது.