கான்பெரா: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இன்றைய 15 வது லீக் சுற்று ஆட்டத்தில், மேற்கு இந்தியத் தீவுகள் அணியும் ஜிம்பாப்வே அணியும் மோதின. முன்னதாக டாஸ் வென்ற மேற்கு இந்தியத் தீவுகள் அணி பேட்டிங் செய்யத் தீர்மானித்து களம் இறங்கியது.. அணியின் நட்சத்திர வீரர்கள் கிறிஸ் கெய்ல் (215), சாமுவேல்ஸ் (133) ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் அந்த அணி 2 விக்கெட் இழப்புக்கு 372 ரன்கள் குவித்தது. இதை அடுத்து, 373 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களம் இறங்கியது ஜிம்பாப்வே அணி. போட்டி துவங்கிய சிறிது நேரத்தில் மழை பெய்யத் தொடங்கியதால், போட்டி 48 ஓவராகக் குறைக்கப் பட்டது. இதை அடுத்து, ஜிம்பாப்வே அணி 48 ஓவரில் 363 ரன் எடுத்தால் வெற்றி என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. கடின இலக்கை நோக்கி விளையாடிய ஜிம்பாப்வே அணியில் ரன் வேகத்துக்கு ஏற்ப விக்கெட்டும் வேகமாக விழுந்து வந்தது. இதனால் ஜிம்பாப்வே அணி 44.3 ஓவரில் 289 ரன்னுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து தோல்வியைத் தழுவியது. மேற்கு இந்தியத் தீவுகள் அணி ஜிம்பாப்வேயை 73 ரன் வித்தியாசத்தில் வெற்றி கொண்டது. இரட்டை சதம் அடித்த மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் கிறிஸ் கெய்ல் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

