
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக பரோட்டா சுட்டு அமைச்சர் செஞ்சி மஸ்தான் வாக்கு சேகரித்த சம்பவம் வாக்காளர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதேபோல் அதிமுக ஆர்.பி உதயகுமார் ஒரு டீ கடைக்கு சென்று டீ போட்டு கொடுத்து வாக்கு இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்தார்.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ-வாக இருந்த திருமகன் ஈவெரா மறைவைத் தொடர்ந்து, அந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. பிப்.27ம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வாக்குப்பதிவு நடக்க உள்ளது.
இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பாக காங்கிரஸ் கட்சி ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதேபோல் அதிமுக சார்பாக தென்னரசு, தேமுதிக சார்பாக ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பாக மேனகா உள்ளிட்டோர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது
ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்த அமைச்சர் செஞ்சி மஸ்தான், திடீரென தள்ளுவண்டி ஹோட்டல் அருகே சென்றார். பின்னர் தள்ளுவண்டி கடையில் பரோட்டா போட்டிக் கொண்டிருந்த தொழிலாளியிடம் ஓய்வெடுக்க கூறிய செஞ்சி மஸ்தான், பரோட்டா போடும் பணியை செய்ய தொடங்கினார்.

சப்பாத்தி கட்டையை கையில் எடுத்து பரோட்டாவை தேய்த்து, தேர்ந்த பரோட்டா மாஸ்டர் போல் பரோட்டாவை வீசி, இறுதியாக எண்ணெய் ஊற்றி கல்லில் போட்டு பரோட்டா சுட்டார். இது அப்பகுதி மக்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. தேர்ந்த பரோட்டா மாஸ்டர் போல் பரோட்டா சுட்ட அமைச்சர் செஞ்சி மஸ்தானின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்காக வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார். அப்போது அந்த பகுதியில் உள்ள ஒரு டீ கடைக்கு சென்று டீ போட்டு கொடுத்து வாக்கு சேகரித்தார்.




