ஓசியாக பறித்து சாப்பிட்ட கொடுக்காப்புளி கிலோ ரூ.200

Published:

IMG 20230210 WA0028 - 2026
திண்டுக்கல் மாநகராட்சி அருகே விற்பனையான கொடுக்காப்புளி காய்கள்.

கிராமப்புறங்களில் மட்டுமின்றி நகர்புறங்களிலும் கடந்த காலங்களில் கொடுக்காப்புளி மரங்கள் அதிக அளவு காய்த்து குலுங்கும். இவை பள்ளி மாணவர்கள் மற்றும் சிறுவர்களின் திண்பண்டமாக இருந்து வந்தது.

இதற்கு விலை கொடுக்க வேண்டியதில்லை. யார் வேண்டுமானாலும் மரத்தில் பறித்து சாப்பிட்டுக் கொள்வார்கள். துவர்ப்பு மற்றும் இனிப்பு சுவையுடன் கூடிய இந்த காய் மற்றும் பழங்கள் உடல் நலத்திற்கு ஏற்றது என தெரியாமல் வேண்டிய அளவு சாப்பிட்டு வருவார்கள்.

ஆனால் கால மாற்றத்தின் எதிரொலியாக இது போன்ற காய்களை தற்போதைய சிறுவர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. மேலும் இந்த மரங்களும் அரிதாகி விட்டது. ஒரு சில இடங்களில் மட்டுமே இந்த காய்கள் கிடைத்தாலும் பொதுமக்கள் இதனை விரும்பி வாங்கி உண்கின்றனர்.

இதனை பயன்படுத்தி வியாபாரிகள் காய்களை பறித்து வந்தும், விலைக்கு வாங்கியும் விற்பனை செய்து வருகின்றனர். திண்டுக்கல் காந்தி மார்க்கெட்டில் ஒரு கிலோ கொடுக்காப்புளி ரூ.200க்கு விற்பனை செய்யப்படுகிறது. விருதுநகர் மாவட்டத்தில் இருந்து இந்த காய்களை வாங்கி வந்து விற்பனை செய்வதாக அதன் வியாபாரி தெரிவித்துள்ளார்.

பெரும்பாலும் 40 வயதை கடந்தவர்கள் மட்டுமே இது போன்ற காய்களை சாப்பிட்டு வந்த நிலையில் தற்போது அதனை விலை கொடுத்து வாங்கி தாங்களும் தங்கள் குழந்தைகளுக்கும் கொடுத்து வருகின்றனர். கால மாற்றத்தால் நல்ல உணவுகள் படிப்படியாக குறைந்து வரும் நிலையில் கொடுக்காப்புளியும் காட்சிப் பொருளாக மாறி விடுமோ என்ற நிலை உருவாகியுள்ளது.

ALSO READ:  ஹரிஜன ஆலயப் பிரவேசம் செய்த வைத்யநாத ஐயரின் பிறந்த தினத்தில் மரியாதை!

Related articles

Recent articles

spot_img