
மஹா சிவராத்திரி விழாவுக்காக வெள்ளியங்கிரி சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு நான்கு நாட்கள் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
கோவை அருகே மேற்கு தொடர்ச்சி மலையடிவாரம் பூண்டியில் வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. மிகவும் புகழ்பெற்ற இந்த கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள். வெள்ளியங்கிரி 7-வது மலையில் சுயம்புலிங்கம் உள்ளது. இது தென்கைலாயம் என்றும் அழைக்கப்படுகிறது. அந்த சுயம்பு லிங்கத்தை தரிசிக்க சிவராத்திரி, சித்ரா பவுர்ணமி ஆகிய நாட்களில் ஏராளமான பக்தர்கள் 7 மலை ஏறி சென்று சாமி தரிசனம் செய்வது வழக்கம். பக்தர்கள் நடந்து செல்லும் மலைப்பாதை அடர்ந்த வனப்பகுதி ஆகும்.
இங்கு வனவிலங்குகளின் நடமாட்டமும் அதிகம் இருக்கும். மலை மேல் அடிக்கடி காலநிலை மாற்றமும் ஏற்படும். ஜூன் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை வெள்ளியங்கிரி மலை மீது ஏற பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுவது இல்லை. இந்த நிலையில் சிவராத்திரி நாளைசனிக்கிழமை கொண்டாடப்படுகிறது.
எனவே வெள்ளியங்கிரி மலை ஏற அனுமதிக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து வெள்ளியங்கிரி மலைக்கு செல்ல பக்தர்களுக்கு வனத்துறை அனுமதி அளித்து உள்ளது. இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:- ஆண்டுதோறும் சிவராத்திரி, சித்ரா பவுர்ணமி ஆகிய 2 விழாக்களுக்கு மட்டுமே வெள்ளியங்கிரி மலை மீது செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும். தற்போது சிவராத்திரி விழாவுக்காக இன்று (வெள்ளிக்கிழமை) முதல் வருகிற 20-ந் தேதி வரை 4 நாட்கள் மட்டும் மலையேற பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. மலையேறும் பக்தர்கள் பிளாஸ்டிக் பொருட்கள் எடுத்துச் செல்வதை தவிர்க்க வேண்டும். தீவிர சோதனைக்கு பிறகே பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவார்கள். பிளாஸ்டிக் பாட்டில்களை மலையில் வீசுவதை தடுக்க புதிய திட்டத்தை அமல்படுத்த உள்ளோம். அதன்படி பக்தர்கள் மலை மீது கொண்டு செல்லும் பிளாஸ்டிக் பாட்டிலுக்கு ரூ.20 வசூலித்து ஸ்டிக்கர் ஒட்டப்படும். பக்தர்கள் மலையில் இருந்து இறங்கும் போது ஸ்டிக்கர் ஒட்டிய பாட்டிலை வனத்துறையிடம் கொடுத்து ரூ.20-ஐ திரும்ப பெற்றுக்கொள்ளலாம்.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோவிலில் மகா சிவராத்திரி விழா சிறப்பாக நடைபெறும். இந்த விழாவில் தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வது வழக்கம்.
சதுரகிரி கோவிலுக்கு மாசி மாத பிரதோஷம் மற்றும் மகா சிவராத்திரி, அமாவாசையை முன்னிட்டு நாளை (18-ந் தேதி) முதல் 21-ந் தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் மலையேறிச் சென்று சாமி தரிசனம் செய்ய வனத்துறை அனுமதி வழங்கி இருக்கிறது.
மகா சிவராத்திரி அன்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு பகலில் 4 கால பூஜைகளும், இரவில் 4 கால பூஜைகள் மற்றும் சிறப்பு அபிஷேகங்களும் நடைபெற்ற உள்ளன. பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளையும், ஏற்பாடுகளையும் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் பக்தர்களுக்காக மதுரை, விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து தாணிப்பாறை மலைஅடிவாரப் பகுதிக்கு சிறப்பு பஸ்களும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன. நாளை மகா சிவராத்திரி என்பதால், தாணிப்பாறை வழியாக, காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை மலை ஏறி சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி உண்டு எனவும், ஆனால் கோவிலில் பக்தர்கள் நாளை இரவில் தங்கி வழிபட அனுமதி இல்லை என்று வனத்துறையினர் கூறியுள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறும்போது, இந்த வனப்பகுதி புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பலதரப்பட்ட விலங்குகள் காணப்படுகின்றன. இரவு நேரங்களில் பொதுமக்களுக்கு வனவிலங்குகளால் பாதிப்பு ஏற்படும் என்பதால், இரவு நேரத்தில் பக்தர்கள் தங்கி வழிபட அனுமதி இல்லை” என்று கூறினர்.




