
மாநில அமைச்சரவை எடுக்கும் முடிவுகளுக்கு உட்பட்டவர் கவர்னர் என உச்சநீதிமன்றம் இன்று தெரிவித்துள்ளது. பஞ்சாப் சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரைக் கூட்ட கவர்னர் அனுமதி வழங்காமல் தாமதப்படுத்தியதைக் கண்டித்து தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
பஞ்சாபில் மார்ச் 3ஆம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடரைக் கூட்ட வேண்டும் என அம்மாநில முதல்வர் பகவந்த் மான் தரப்பில் முடிவு செய்யப்பட்டது.
இதற்காக பஞ்சாப் கவர்னரான பன்வாரிலால் புரோஹித்துக்கு அமைச்சர்கள் குழு ஆவணங்கள் அளித்து அனுமதி கோரியிருந்தனர். ஆனால், கவர்னர் தரப்பிலிருந்து எந்தவொரு முடிவும் தெரிவிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனை எதிர்த்து பஞ்சாப் அரசு உச்சநீதிமன்றத்தை நாடியது. இதனை அவசர வழக்காக ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம், நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.
அதில், பட்ஜெட் கூட்டத்தொடரை நடத்த கவர்னர் தரப்பில் ஏற்கெனவே ஆளுநர் அனுமதி அளித்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கில் கருத்து தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம், கவர்னர் என்ன விவரங்களைக் கேட்கிறாரோ அதனை மாநில அரசு வழங்க வேண்டும். அதேபோன்று மாநில அரசு எடுக்கும் முடிவுகளுக்கு கவர்னர் உட்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.
அரசியல் கொள்கைகளில் மாறுபாடுகள் இருந்தாலும், மக்கள் நலன் சார்ந்த பணி என்றால், அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.




