முல்லை பெரியாறு அணை பராமரிப்பு- உச்ச நீதிமன்றம் புது உத்தரவு

Published:

images 50 - 2026
#image_title

முல்லை பெரியாறு அணையில் பராமரிப்பு பணியை மேற்கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி வழங்க வேண்டுமென கேரள அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முல்லை பெரியாறு அணையின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பாக இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், பாதுகாப்பு கண்காணிப்பு குழுவை மாற்றி அமைத்தது.

மேலும், அணை பராமரிப்பு தொடர்பான விவகாரங்களை இனி அக்குழுவிடமே முறையிட வேண்டும் என்றும், முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் இனி தமிழகம் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களின் மனுக்கள் மட்டுமே உச்ச நீதிமன்றத்தால் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனவும் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் முல்லை பெரியாறு அணை பராமரிப்பு பணிகளில் கேரள அரசு முட்டுக்கட்டை போட்டு வருவதாக தமிழக அரசு தரப்பில் கடந்த மாதம் இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதேபோல கேரளாவைச் சேர்ந்த ஜாய் ஜோசப் என்பவரும் அணையை மறுஆய்வு செய்யக்கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.

ALSO READ:  சதுரகிரி ஆடி அமாவாசை முன்னேற்பாட்டுப் பணிகள்; அதிகாரிகள் ஆய்வு!

மேலும் இந்த விவகாரம் தொடர்பாக மத்திய நீர்வள ஆணையம் மற்றும் கேரள அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் விளக்க மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இந்நிலையில் முல்லை பெரியாறு அணை தொடர்பான வழக்கு நீதிபதி எம்.ஆர்.ஷா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது கேரள மனுதாரர் தரப்பில், அணையின் பாதுகாப்பு தொடர்பாக ஆய்வு நடத்தி 10 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டதால் மீண்டும் அணையின் ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.

எனவே இந்த ஆய்வை மேற்கொள்ள அணை பாதுகாப்பு கண்காணிப்பு குழுவுக்கு உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டது.

அதற்கு ஆட்சேபம் தெரிவித்த தமிழக அரசு, முல்லை பெரியாறு அணை பாதுகாப்பாக இருப்பதாக அணை பாதுகாப்பு குழு தெளிவாக தெரிவித்துள்ளது.

மேலும் முல்லை பெரியாறு அணையில் அவ்வப்போது பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள கேரள அரசு முட்டுக்கட்டை போட்டு வருகிறது. அதற்கு அனுமதிக்க வேண்டும்.

அதேப்போன்று வல்லக்கடவு – முல்லைப் பெரியாறு காட்டு வழிச்சாலையை தமிழக அரசு பயன்படுத்திக் கொள்ளவும் கேரள அரசுக்கு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

ALSO READ:  வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், “முல்லை பெரியாறு அணை விவகாரத்தை பொருத்தமட்டில் அதன் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள தமிழக அரசுக்கு, கேரள அரசு அனுமதியளிக்க வேண்டும்.

இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள அனைத்து மனுக்களுக்கும் மத்திய அரசு 2 வாரங்களில் விரிவான பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டு வழக்கை தள்ளி வைத்துள்ளனர்.

Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img