
திருச்சுழி அருகே செம்பொன்நெருஞ்சி கிராமத்தில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு வெகு விமரிசையாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி
இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 400-க்கும் மேற்பட்ட காளைகள் 300-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு
விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே உள்ள செம்பொன்நெருஞ்சி கிராமத்தில் உள்ள கருப்பசாமி, அய்யனார் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி வெகுவிமரிசையாக நடைபெற்றது.
இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்வதற்கு ஆன்லைன் வழியாக மாவட்ட நிர்வாகத்தின் அறிவுரைப்படி 1500 மாடுகள் முன்பதிவு செய்திருந்தனர். 500-க்கும் மேற்பட்ட மாடு பிடி வீரர்கள் முன்பதிவு செய்து இருந்த நிலையில் போட்டியை சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் அனிதா தொடங்கி வைத்தார். போட்டியில் முதல் காளையாக கோயில் காளை வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டது.

இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 400 காளைகள் வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டது. மாடுபிடி வீரர்களும் பங்கேற்று காளைகளை அடக்கினர். அப்போது வாடிவாசலில் துள்ளிக்குதித்த காளைகளை அடக்கிய 8 மாடுபிடி வீரர்கள் காயமடைந்தனர். அவர்கள் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.
வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்ட காளைகளை மாடுபிடி வீரர்கள் ஆர்வத்துடன் அடக்கினர் காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும் மாடுபிடி வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் சைக்கிள், கட்டில், சில்வர் பாத்திரங்கள் மின்சார அடுப்புகள் மற்றும் மின்விசிறிகள் பரிசாக வழங்கப்பட்டன.




